ஆசிரியர்களை எச்சரிக்க வீச்சு அரிவாளுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்✍️ வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
அஸ்ஸாம் மாநிலத்தில், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் மற்ற ஆசிரியர்களை எச்சரிப்பதற்காக கையில் அரிவாளுடன் பள்ளிக்குள் வலம்வந்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
அஸ்ஸாமின் தாராபூர் பகுதியில் வசித்துவருபவர் த்ரிதிமேதா தாஸ் (28). இவர் கடந்த 11 ஆண்டுகளாக ராதாமதாப் புனியாடி பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். தற்போது பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, பள்ளிக்குள் தாஸ் கையில் அரிவாளுடன் வந்திருப்பதாகப் பள்ளியிலிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்திருக்கிறது. அதையடுத்து பள்ளிக்கு விரைந்த காவல்துறையினர், அவரைக் கண்டுபிடிக்க முயன்றனர். பின்னர், தாஸ் கையில் அரிவாளுடன் பள்ளிக்குள் வலம்வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதையடுத்து தாஸ் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, மற்ற ஆசிரியர்களின் முறைகேடுகளால் தாஸ் கோபமாக இருந்ததாகவும், அதனால் அவர்களை அரிவாளைக்காட்டி எச்சரிக்க முயன்றதும் தெரியவந்தது. இருப்பினும், மற்ற ஆசிரியர்களோ அல்லது பள்ளி அதிகாரிகளோ அதிகாரபூர்வமாக காவல்துறையில் புகார் ஏதும் அளிக்காததால் அவர் கைதுசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.