சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், உயர்த்தப்பட்ட அபராத தொகை வசூலிக்கும் பணி துவங்கியது.சென்னையில் பல பகுதிகளில் இரவில் போலீசார் இருட்டில் மறைந்திருந்து அபராதம் வசூலிப்பு✍️✍️விண்மீன் நியூஸ்
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், உயர்த்தப்பட்ட அபராத தொகை வசூலிக்கும் பணி துவங்கியது.சென்னை பலபகுதிகளில் இரவில் போலீசார் இருட்டில் மறைந்திருந்து மடக்கி பிடித்தனர்.
விபத்து குறைப்பு நடவடிக்கையாக, மத்திய அரசு, போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகையை, பன்மடங்கு உயர்த்தி உள்ளது. அதை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.
1,000 ரூபாய்
சென்னையில், வரும், 28ல் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், உயர்த்தப்பட்ட அபராதம்விதிக்கும் பணி, தமிழகம் முழுதும் நேற்று துவங்கியது.
இதற்காக, சென்னை முழுதும் முக்கிய சிக்னல்களில், போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வாகன ஓட்டிகளுடன் வாக்குவாதம் செய்யக் கூடாது என, போலீசாருக்கு ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப, போலீசாரும் அபராதம் விதிப்பதில் கவனமாக இருந்தனர்.
சட்டம் – ஒழுங்கு போலீசாரும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
‘ஹெல்மெட்’ அணியாத வாகன ஓட்டிகளிடம், ஏற்கனவே, 100 – 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. தற்போது, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
அதேபோல, காரில் ‘சீட் பெல்ட்’ அணியாத வாகன ஓட்டிகளிடமும், 1,000 ரூபாய், போதையில் வாகனம் ஓட்டுவோரிடம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அதிக பாரம் மற்றும் அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் என, பல விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கும், உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கப்படுகிறது.
வாக்குவாதம்
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
சில வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்தனர். இவர்களுக்கு அறிவுரை சொல்லி, உயர்த்தப்பட்ட அபராதம் விதித்தோம்.
சாலைகளில், 10 சதவீதம் பேர் மட்டுமே, ஹெல்மெட் அணியாமல் செல்கின்றனர்.
இவர்களும் ஹெல்மெட் அணிந்தால் கட்டாயம் விபத்துகள் குறையும். அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. அனைவரும் போக்குவரத்து விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதனால், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வு பணிக்கு வந்த அதிகாரிகளுடன்
‘ஹெல்மெட்’ அணியாமல் அமைச்சர் வலம்ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதி நேற்று அமலுக்கு வந்தது. இந்த நிலையில், அமைச்சர், மாவட்ட கலெக்டர், மேயர், ஆவடி ஆணையர் உட்பட அனைவரும், ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் ஆய்வு மேற்கொண்டது, பொதுமக்கள் இடையே பேசு பொருளாகி இருக்கிறது.ஆவடி மாநகராட்சி நெடுஞ்சாலைத் துறை சார்பாக, பருத்திப்பட்டு முதல் வசந்தம் நகர் வரை, இருபுறமும் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், நடைபெற்று வருகின்றன.இதுவரை 80 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகள், தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை நேற்று பால்வளத்துறை அமைச்சர் நாசர், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆவடி மேயர் உதயகுமார் மற்றும் ஆவடி ஆணையர் தர்பகராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இவர்கள் அனைவரும், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.