முட்புதருக்குள் பிறந்த குழந்தையின் அழுகைசத்தம்?காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ்? தூக்கிவீசிய தாய்?சிவகங்கையில் பரபரப்பு?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்து அரியக்குடி பழனிச்சாமி நகர் உள்ளது. இங்கு குடியிருப்புப் பகுதியின் அருகே முட் புதருக்குள் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுள்ளது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமேயான குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ்க்குத் தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த ஆம்புலன்ஸ்சில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து, காரைக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, அரசு மருத்துவமனையின் மற்றொரு வார்டில் சரஸ்வதி என்ற பெண் சிகிச்சைக்காக வந்திருக்கிறார். அவர், தனக்கு வீட்டில் குழந்தை பிறந்துள்ளது.
அதை உறவினர்கள் எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். ரத்தப் போக்கு அதிகமானதால், அதற்கு முன்னதாக மருத்துவமனைக்கு வந்ததாகச் சொல்லி சிகிச்சையளிக்கும்படி மருத்துவர்களிடம் கூறியிருக்கிறார்.
செவிலியர்கள் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாகவே பதிலளித்துள்ளார். தொடர்ந்து விசாரித்தபோது முட்புதரிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தை, சரஸ்வதியின் குழந்தைதான் என்று தெரியவந்தது. குழந்தையைப் பெற்று முட்புதரில் வீசிவிட்டு மருத்துவமனைக்கு அவர் வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் போலீஸாருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். போலீஸார் சரஸ்வதியிடம் விசாரித்ததில், அவருக்குத் திருமணாகி ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருப்பதும் அவரின் கணவர் 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதும் தெரியவந்தது. குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவர் குழந்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்தான், குழந்தையை முட்புதரில் அவர் வீசியுள்ளார். இதுகுறித்து சரஸ்வதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.