டோல்கேட்களில் பைக்குகளுக்கு மட்டும் ஏன் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை தெரியுமா? பலபேரின் சந்தேகம்✍️இலவசம்னு மட்டும் நெனச்சுக்காதீங்க✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
இலவசம்னு நெனச்சுக்காதீங்க… டோல்கேட்களில் பைக்குகளுக்கு மட்டும் ஏன் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை தெரியுமா?
இந்தியா முழுவதும் டோல் கேட்களில் பைக்குகளுக்கு மட்டும் ஏன் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை எனத் தெரியுமா? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
நாம் எல்லோரும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்திருப்போம். சொந்த/ வாடகை வாகனத்தில் பயணித்தாலும் சரி ஏன் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போதும் நாம் சுங்கச்சாவடிகளைக் கடந்து சென்றிருப்போம். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிடம் மத்திய அரசு சுங்கச்சாவடிகளை அமைத்து அந்த சாலையில் பயணிப்பதற்கான கட்டணத்தை வசூலிக்கிறது.
இதில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு விதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக காருக்கு ஒரு விலை, வேனிற்கு ஒரு விலை, பஸ்களுக்கு ஒரு விலை லாரிகளுக்கு ஒரு விலை என ஒவ்வொரு வாகனத்திற்கும் வேறு வேறு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடி கட்டணத்தை மத்திய போக்குவரத்துத் துறை ஃபாஸ்ட் டேக் முறையில் அமல்படுத்தியது.
அதாவது ஒரு வாகனத்தின் முன்பு ஸ்டிக்கர் போன்ற ஒன்று ஒட்டப்பட்டு அதன் மூலம் ஆன்லைனிலேயே பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இன்று இந்தியாவில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஃபாஸ்ட் டேக் கார்டு கட்டாயம் என்ற விதிமுறை வந்துவிட்டது. இதனால் எல்லா வாகனங்களிலும் இந்த ஃபாஸ்ட் டேக் கார்டை காண முடியும். இது மட்டுமல்ல ஃபாஸ்ட் டேக் கார்டு இல்லாத கார்களுக்கு இரட்டை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த சுங்கச்சாவடிகளில் சில வாகனங்களுக்கு மட்டும் கட்டணம் இல்லாமல் கடந்து செல்ல அனுமதியிருக்கிறது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் அரசு வாகனங்கள், நீதிபதிகளின் வாகனங்கள் இப்படியாக சில வாகனங்களுக்கு மட்டும் டோல்கேட்டை கட்டணம் இல்லாமல் கடந்து செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் இருசக்கர வாகனமும் சேரும்.
ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பயணித்தால் அவர் டோல்கேட்களை கடந்து செல்லும் போது அதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதை நாம் பல முறை பார்த்திருப்போம். பலர் இருசக்கர வாகனங்களில் கட்டணம் இல்லாமலேயே கடந்து சென்றிருப்போம். ஆனால் பலருக்கு ஏன் இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் கட்டணம் கிடையாது என்ற சந்தேகம் இருக்கும். சிலருக்கு ஏன் இருசக்கர வாகனத்திற்கு மட்டும் இலவச அனுமதி என எரிச்சலடைவார்கள்.
ஏன் பைக்குகளுக்கு மட்டும் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என் தெரிந்து கொள்ளும் முன்பு, முதலில் ஏன் டோல்கேட் கட்டணம் வசூலிக்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணியை பெரும் பணச் செலவில் உருவாக்கியது. இதனால் போக்குவரத்து எளிமையாகும், இதனால் இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்ற நோக்கில் இதைச் செய்தது.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிப்பதும் பெரிய பணியாக இருந்ததது. சாதாரண ரோடுகளை விட நெடுஞ்சாலை ரோடுகள் தரமானதாக இருக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் பல்வேறு வசதிகள் இருக்க வேண்டும், எனப் பல வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில் இந்த செலவினங்களுக்கான பணத்தைச் சாலையைப் பயன்படுத்தும் மக்களிடமிருந்தே வசூலிக்கும் நோக்கில் தான் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு டோல்கேட்களை அமைத்தது.
இந்த டோல்கேட்டை கடக்கும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணங்களை வசூலித்தது. இப்படியாக வசூலிக்கப்படும் பணம் அந்த பகுதியிலுள்ள சாலையைப் பராமரிக்கவும் மேம்படுத்தவுமே செலவு செய்யப்படுகிறது.
இப்படியாகப் பார்க்கும் போது தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பைக்குகளுக்கு மட்டும் கட்டணம் இல்லாமல் கடந்து செல்ல அனுமதியிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த வாகனம் நெடுஞ்சாலைக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பது தான் முக்கியமான காரணம்.
பைக் எடையிலும் சரி, அளவிலும் சரி சிறிய இடத்தை தான் பிடிக்கும், இதனால் நெடுஞ்சாலைகளில் பைக்கில் செல்வதால் சாலைகளுக்குப் பெரிய அளவில் சேதாரம் இல்லை. இதனால் அதற்கு ஒரு கட்டணம் வசூலிக்கத் தேவையில்லை எனப் போக்குவரத்துத் துறை நினைத்தது இந்த கட்டணத்தை ரத்த செய்தது. ஆனால் இது மட்டுமே இந்த இருசக்கர வாகன கட்டண ரத்துக்குக் காரணம் இல்லை.
பொதுவாகத் தேசிய நெடுஞ்சாலைகள் நீண்ட தூரம் பயணிப்பதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாலைகள், ஆனால் இந்தியாவில் பைக்குகள் பெரும்பாலும் குறைந்த தூரத்தை கடந்து செல்லவே பயன்படுத்தப்படுகின்றன. வெகு சிலரே பைக்குகளில் நீண்ட தூரம் பயணிக்கிறார்கள்.
இதனால் வாகன ஓட்டிகள் ஒரு ஊரிலிருந்து அருகிலுள்ள ஒரு ஊருக்குச் செல்ல தேசிய நெடுஞ்சாலையைப் பயணிக்கும் போது சுங்கச்சாவடி இருந்தால் அதில் பைக்குகளுக்கு கட்டணம் வசூலிப்பது நியாயம் ஆகாது. அதனால் சுங்கச்சாவடிகளில் பைக் இலவசமாகக் கடந்து செல்ல அனுமதிக்க இதுவும் ஒரு காரணம்,
இது போக இருசக்கர வாகன ஓட்டிகள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவராக இருக்க வாய்ப்பிருக்கிறது. கூலித்தொழிலாளி உள்ளிட்ட பலர் இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் விதித்தால் அவர்களுக்குச் சுமை அதிகரிக்கும் என்பதால் இருசக்கர வாகனத்தை இலவசமாக அனுமதிக்க முடிவு செய்தனர்..