கடன் பிரச்னையால் விரக்தி எலி மருந்து சாப்பிட்டு தாய், மகள் தற்கொலை: 2 பேர் சீரியஸ்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
✍️கடன் பிரச்னையால் விரக்தி எலி மருந்து சாப்பிட்டு தாய், மகள் தற்கொலை: 2 பேர் சீரியஸ்
✍️சென்னை: கடன் பிரச்னையால் எலி மருந்து சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில், தாய், மகள் பரிதாபமாக இறந்தனர். நீலாங்கரை செங்கேணி அம்மன் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் ராம்குமார் (35). அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லேப் எக்யூப்மென்ட் சர்வீஸ் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். அவரது தாயார் மீனாட்சி (55). சகோதரி சந்தானம்மாரி (40). சகோதரி மகள் மோகனப்பிரியா (20), மனவளர்ச்சி குன்றியவர். அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் ராம்குமார் வீட்டில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. அதனால் வீட்டின் உரிமையாளர் ஓடி சென்று பார்த்தபோது 4 பேர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனே நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சந்தானமாரி மற்றும் அவரது மகள் மோகனப்பிரியா ஆகியோர் இறந்தது தெரிந்தது. அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கும், மயங்கி கிடந்த ராம்குமார் அவரது அம்மா மீனாட்சி ஆகிய இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வங்கிகளில் அதிகம் கடன் பெற்றுள்ளதாகவும், கடனை அடைக்காததால் தொடர்ந்து வங்கியில் இருந்து செல்போனில் தொடர்புகொண்டு கடனை திருப்பி கேட்டு வந்ததும், கடன் தொல்லையால் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எலி மருந்து உட்கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.