அரசுப் பேருந்து நடத்துநரை அடித்துக் கொலைசெய்த பயணி! – பேருந்துக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்✍️✍️விண்மீன்நியூஸ்
அரசுப் பேருந்து நடத்துநரை அடித்துக் கொலைசெய்த பயணி! – பேருந்துக்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்*
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில், மதுராந்தகம் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் பயணி ஒருவர் ஏறியிருக்கிறார். குடிபோதையிலிருந்த அவரிடம், அந்தப் பேருந்தின் நடத்துநர் பெருமாள் பிள்ளை டிக்கெட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதற்குக் குடிபோதையிலிருந்த அந்த பயணி டிக்கெட் எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
இதனால், பேருந்து நடத்துநர் பெருமாளுக்கும், அந்த போதை ஆசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில், இருவருக்குமிடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது குடிபோதையிலிருந்த அந்த நபர் பேருந்து நடத்துநர் பெருமாளை சரமாரியாகத் தாக்கினார். அதில் நிலைகுலைந்த பெருமாள் மயக்கமடைந்தார். அதைக் கண்டு பேருந்திலிருந்து பயணிகள் கூச்சலிடவே, அந்த போதை ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். அதையடுத்து, பயணிகள் மயங்கிய நடத்துநரைச் சிகிச்சைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனையில் பெருமாளைச் சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, நடத்துநரை தாக்கிக் கொன்ற நபரைக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த நடத்துநர் பெருமாள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். மேலும், அவரின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.