மகாராஷ்டிராவில் வழிபாட்டுத்தலங்களில் ஒலி பெருக்கிகளுக்கு அனுமதிபெற கெடு! – மகாராஷ்டிரா அரசு திடீர் கெடு✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
மகாராஷ்டிரா அரசு வழிபாட்டுத்தலங்களில் ஒலி பெருக்கிகளுக்கு அனுமதிபெற கெடு! – மகாராஷ்டிரா அரசு*
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ்தாக்கரேவின் சித்தப்பா மகன் ராஜ்தாக்கரே, மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகள் குறித்து அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார். கடந்த மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்தாக்கரே இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்துப் பேசிவிட்டு வந்தார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் ராஜ்தாக்கரே தூக்கத்திலிருந்து எழுந்தவர் போல, ஒலி பெருக்கி பிரச்னையை கிளப்பிவிட்டிருக்கிறார். வரும் மே 3-ம் தேதிக்குள் மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்றவேண்டும் என்று ராஜ்தாக்கரே மாநில அரசுக்குக் கெடு விதித்திருக்கிறார்.
ராஜ்தாக்கரே மக்களை எளிதில் கவரும் தலைவராக இருக்கிறார். அவர் சொன்னால் உடனே செய்வதற்கு அவரது கட்சியில் ஆள்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜ்தாக்கரே ஒலி பெருக்கிக்கு எதிராக மசூதிகளுக்கு வெளியில் ஹனுமான் பாடல்களைப் பாடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தார். அன்றே அவரது மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சி தொண்டர்கள் மும்பையில் மசூதிகளுக்கு வெளியில் ஹனுமான் பாடல்களைப் பாடி கைது செய்யப்பட்டனர். தற்போது மே 3-ம் தேதிக்குள் மசூதிகளில் இருக்கும் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ்தாக்கரே கெடு விதித்திருப்பதால் மாநிலத்தில் ஒருவித பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தற்போது அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இருக்கும் ஒலி பெருக்கிகளுக்குக் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் உத்தவ்தாக்கரேவுடன் மாநில உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. மே 3-ம் தேதிக்குள் ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. ராஜ்தாக்கரே சொன்ன அதே தேதியை அரசும் கெடுவாக விதித்திருக்கிறது. எனவே அனுமதி பெறாத ஒலி பெருக்கிகளை மே 3-ம் தேதிக்குப் பிறகு அகற்றிவிடுவோம் என்று அரசு எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே நாசிக்கில் போலீஸ் கமிஷனர் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் உடனே ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி பெறவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதோடு நாசிக் போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டே வெளியிட்டுள்ள உத்தரவில் ஹனுமான் சலிசா, பஜனை பாடுவதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும், மசூதிகளின் அஷானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அல்லது பின்பு பஜனை பாடக்கூடாது. மசூதியிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் இது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் விரைவில் மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவேதான் ஒலிபெருக்கி பிரச்னையை ராஜ்தாக்கரே கையில் எடுத்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சமூக வலைதளங்களில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தகவல்களைக் கண்டுபிடித்து அகற்றுவதற்காக மும்பை போலீஸார் சோசியல் மீடியா லேப் ஒன்றை அமைத்திருக்கின்றனர். அந்த லேப் மூலம் இது வரை 3,000 சமூக வலைதள பதிவுகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. அதோடு ராம நவமியை ஒட்டி மத வன்முறையில் ஈடுபட்டதாக 61 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். வரும் நாள்களில் மத வன்முறைச் சம்பவங்கள் அதிக அளவில் தலைதூக்க வாய்ப்பிருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த மாநில போலீஸார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்