வெங்காய படையப்பா..! சும்மா அதிருதுல்ல..!
வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்க 1 கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு தருவதாக ஆந்திர அரசு அறிவித்ததும், பொது மக்கள் உழவர் சந்தையில் வெங்காயம் வாங்குவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வெங்காயம் வாங்கிச்சென்றனர்.
இங்கே முண்டியடிப்பவர்கள் தங்கள் அபிமான நடிகரின் படத்தை பார்க்கவோ அல்லது அரசு இலவசமாக கொடுக்கும் பொருட்களை வாங்கிச்செல்லவோ வரிசையில் காத்திருக்கவில்லை ஒரு கிலோ வெங்காயம் கிடைத்து விடாதா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.
ஒரு கிலோ வெங்காயம் 180 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்து நடுத்தர குடும்பத்தினரின் கண்ணீரை துடைத்திருக்கிறார் ஆந்திர முதல் அமைச்சர். அந்த ஒரு கிலோ வெங்காயத்தை வாங்கத்தான் இந்த படை காத்திருக்கிறது.
ஆதார் கார்டுடன் வரும் ஒருவருக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே 25 ரூபாய்க்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 4 பேருக்கு மேல் அங்கு வந்ததால் வரிசை கட்டி காத்திருக்கும் நிலை ஏற்பட்டது
முட்டை ஆம்லெட், வெங்காய சட்னி, வெங்காய தோசை, வெங்காய சாம்பாரை மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் வெங்காயத்தின் விலை எபோது குறையும் என காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் டிக்டாக் பிரியர்கள் வெங்காய விலை உயர்வை கிண்டலடிக்கும் விதமாக தினம் ஒரு வீடியோ வை வெளியிட்டு வருகின்றனர்.
வெங்காயத்தை பதுக்கும் மொத்த வியாபாரிகளின் குடோன்களை சோதனையிட்டு பதுக்கல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே வெங்காயத்தின் விலை குறையும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்..!