இந்தியாவிலேயே முதன்முதலாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி உயர மனிதர்… ✍️மாற்றுத்திறனாளி சிவபால் சாதனை!✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
இந்தியாவிலேயே முதன்முதலாக ஓட்டுநர் உரிமம் பெற்ற 3 அடி உயர மனிதர்… மாற்றுத்திறனாளி சிவபால் சாதனை!
இன்றளவும் வலிமை என்பது உடலளவில் மட்டுமே உள்ளது என நம்பும் சாதாரண மனிதர்கள் மத்தியில் மனவலிமையை உறுதியாக ஏற்று சாமானிய மனிதராய் சாதனை படைத்துள்ளார் 3 அடி உயர மாற்றுத்திறனாளி.
மேலும் சிவபால் 2004-ல் அனைத்து முரண்பாடுகளையும் வென்று தனது மாவட்டமான கரீம் நகரில் மாற்றுத்திறனாளியாக தனது பட்டப்படிப்பை முடித்த முதல் பட்டதாரியாகவும் திகழ்ந்து வருகிறார்.
ஓட்டுநர் உரிமம் பெற்ற காட்டிபல்லி சிவபால் தனது சிரமங்களை கூறுகையில்:
“பயணம் செய்ய நான் வாடகை வண்டிகளை முன்பதிவு செய்யும் போதெல்லாம் அவர்கள் பயணத்தை ரத்து செய்வார்கள். நான் என் மனைவியுடன் வெளியே செல்லும்போது, மக்கள் மிக கிண்டலாக மோசமான கருத்துகளை கூறியுள்ளனர். அப்போதுதான் நான் சொந்தமாக கார் ஒன்றை ஓட்ட முடிவு செய்தேன்.
அதைத் தொடர்ந்து நான் சொந்தமாக கார் வாங்க விரும்பினேன். இது தொடர்பாக இணையதளத்தில் தேடியபோது அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரின் வீடியோவை பார்த்தேன். அதில் குள்ளமானவர்களுக்காக காரில் செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து விளக்கி இருந்தார். இதையடுத்து, கார் வாங்கி மாற்றங்களைச் செய்தேன்.
பின்னர் என் நண்பர் மூலம் ஓட்டுநர் பயிற்சி பெற்றேன். எனினும் மாற்றுத்திறனாளி என்பதால் எனக்கு ஓட்டுநர் உரிமம் கிடைப்பதில் பல சிரமங்கள் இருந்தன. அதனைக் கடந்து தற்போது எனக்கான ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிவபால், இதற்கு முன்னர் திரைப்படம் ஒன்றிலும், தினசரி சீரியல் ஒன்றிலும் நடித்ததாகவும், ஆனால் நீண்ட காலம் அந்தத் துறையில் நிலைத்திருக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
தற்போது தனது நண்பர் மூலம் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்து, கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
மேலும் அடுத்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டுநர் பயிற்சி மையம் ஒன்றையும் திறக்க முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்த்துகள் சிவபால்!