முன்னால் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: கூல் தங்கமணி; வேலுமணி பாணியில் போராட வந்தவர்களுக்கு தக்காளி சாதம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
விண்மீண்தீ நியூஸ்:
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: கூல் தங்கமணி; வேலுமணி பாணியில் போராட வந்தவர்களுக்கு தக்காளி சாதம்
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, அவர் உறவினர்கள் வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. இதில், அமைச்சரின் சொந்த ஊரில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து, அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், வேலுமணி, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர் வரிசையில் ஐந்தாவது நபராக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சம்பந்தப்பட்ட 69 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் அவர் சம்பந்தப்பட்ட, தொடர்புடைய 14 இடங்கள், ஆந்திரா, சொந்த மாவட்டமான நாமக்கல், ஈரோடு, கரூர் என்று பல பகுதிகளில் சோதனை நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 32 இடங்களில் சோதனை நடந்தது. அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் 11 இடங்களிலும், கரூரில் இரண்டு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் சோதனை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகில் உள்ள கோவிந்தம்பாளையத்தில் இருக்கும் தங்கமணி வீட்டில், ஏராளமான அ.தி.மு.க-வினர் காலை முதலே குவிய தொடங்கினர். 18 பேர்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தினர்.
அதேபோல, தங்கமணி அமைச்சராக இருந்தபோது, பல்வேறு கட்டுமான பணிகளை செய்த சத்தியமூர்த்தி கன்ஸ்ட்ரக்ஷனுக்கு சொந்தமான அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. பள்ளிப்பாளையம் களியனூர் பகுதியில் உள்ள தங்கமணியின் சம்மந்தி சிவசுப்ரமணியன் வீடு, அவரது தம்பி மூர்த்தி வீடுகளிலும், தங்கமணியும் மருமகனும், தனியார் தொலைக்காட்சி நிர்வாகியுமான தினேஷ் வீட்டிலும் ரெய்டு நடந்தது. அதேபோல், பள்ளிப்பாளையம் ஆண்டிக்காடு பகுதியில் வசித்து வரும் தங்கமணியின் சகோதரியான நாகரத்தினம் வீட்டிலும் சோதனை நடந்தது. தங்கமணி தரப்பில் இந்த சோதனையை எப்போதே எதிர்பார்த்திருந்தார் என்று சொல்லப்படுவதால், அதற்கு ஆயத்தமாக இருந்த அவர், இந்த சோதனையை கூலாகவே எதிர்கொண்டார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது, அ.தி.மு.க-வினரை குவித்து, பரபரப்பு காட்டியதுபோல், அவர் பாணியில் தங்கமணி உத்தரவிட, காலை முதலே 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் அவரது வீட்டுக்கு முன் குவிந்தனர். அவ்வபோது, காவல்துறைக்கும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு காலை டிபன், மதியம் தக்காளி சாதம் என்று தங்கமணி தரப்பு ஏற்பாடு செய்தது. இதுவும் வேலுமணியைப் பார்த்து அப்படியே தங்கமணி தரப்பும் காப்பியடித்திருப்பதாக அ.தி.மு.க-வினரே பேசிக்கொண்டனர். இதற்கிடையில், மதியம் போல, முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், தாமோதரன் என்று பலரும் வர, தங்கமணியின் வீடு இன்னும் பரபரப்படைந்தது. அங்கே கூடியிருந்த அ.தி.மு.க-வினர், ‘பொய் வழக்கு போடும் தமிழக அரசை கண்டிக்கிறோம்’ என்று ஆக்ரோஷமாக கோஷமிட்டனர்.
பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய வேலுமணி, “இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுகிறது. என்னென்ன காரணதுக்காக இந்த சோதனை நடக்கிறது என்பதை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக விளக்கியுள்ளார். ஓ.பி.எஸ்-ஸூம் அதுகுறித்து தெளிவுப்படுத்தியுள்ளார். தற்போதைய தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த 7 மாதத்தில், எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆனால், அ.தி.மு.க-வில் வேகமாக செயல்படும் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களை ரெய்டு என்ற பெயரில் ஸ்டாலின் முடக்கப் பார்க்கிறார். ஸ்டாலினை யார் யார் விமர்சித்தார்களோ அவர்கள் மீது, காவல்துறையினரை வைத்து பொய்வழக்கு போடவைக்கிறார்” என்றார். அதேபோல, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஸூம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், ‘இது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் நடத்தப்படும் தாக்குதல். தி.மு.க அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று கன்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தங்கமணியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியதில், கணக்கில் வராத 2.16 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட 2.37 கோடி ரூபாயில், 2.16 கோடி கணக்கில் காட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், சோதனையில் 1.13 கிலோ தங்கம், 40 கி
லோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்குகள் கைப்பற்றப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.