விருதுநகரில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா போக்சோவில் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
விருதுநகர்: மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா போக்சோவில் கைது*
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மகள் முறை கொண்ட பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் நடுவூர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது தந்தையை இழந்த மாணவி, தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தனது தாயுடன் வசித்து வருகிறார். மாணவி தற்போது விஸ்வநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கொரோனா பரவலால் கடந்த ஓராண்டிற்கு மேலாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவி ஆன்லைன் மூலமாக வீட்டில் தனியாக இருந்தபடியே கல்வி பயின்று வருகிறார். இதை பயன்படுத்திக் கொண்ட மாணவியின் சித்தப்பா ராமர் (29) மாணவியின் வீட்டிற்கு தினந்தோறும் வந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ராமர் மாணவிக்கு தினந்தோறும் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் மாணவி கர்ப்பமானார்.
இது குறித்து மாணவியின் தாய் ஈஸ்வரி மற்றும் சித்தி ஆனந்தி மாணவியிடம் கேட்டபோது, தான் கர்ப்பமானதற்கு சித்தப்பா ராமர் தான் காரணம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் அரசு மருத்துவமனை சார்பாக சிவகாசியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு சென்ற மகளிர் போலீசார் பள்ளி மாணவி மற்றும் குடும்பத்தினரிடம் நடத்திய ரகசிய விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என்று தெரியவரவே மாணவியின் சித்தப்பா ராமரை கைது செய்த மகளிர் காவல்நிலைய போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்தனர்.