பிளஸ்-1 மாணவியின் அரைநிர்வாண படத்தை இணையதளத்தில் பதிவிட்ட 2 வாலிபர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு✍️ போலீசார் வலைவீசி தேடல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பிளஸ்-1 மாணவியின் அரைநிர்வாண படத்தை இணையதளத்தில் பதிவிட்ட 2 வாலிபர்கள் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே தலக்குளம் பட்டரிவிளையை சேர்ந்தவர் ஆல்வின் ஷைஜோ (வயது 21). இவர் பிளஸ்-1 மாணவி ஒருவரிடம் சகஜமாக பழகி வந்துள்ளார். ஆல்வின் ஷைஜோவை முழுைமயாக நம்பிய அந்த மாணவி, அவர் சொல்வதை எல்லாம் செய்து வந்ததாக தெரிகிறது.
இதை சாதகமாக பயன்படுத்திய ஆல்வின் ஷைஜோ, மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி அவரது ஆபாச படங்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார். மாணவியும் தனது அரைநிர்வாண படத்தை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளார்.
சில நாட்கள் கடந்தபின் ஆல்வின் ஷைஜோ, மாணவியை தொடர்பு கொண்டு தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்தநிலையில் ஆல்வின் ஷைஜோ, மாணவியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, ஆல்வின் ஷைஜோவிடம் படத்தை அழித்து விடும்படி கெஞ்சி கேட்டுவிட்டு, அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
இதனால், ஆத்திரமடைந்த ஆல்வின் ஷைஜோ அந்த படத்தை மாணவியின் ஊரில் உள்ள தனது நண்பர் ஆஷிக் ரெனால்டுக்கு அனுப்பி வைத்தார். ஆஷிக் ரெனால்டு, அந்த படத்தை வைத்து கொண்டு மாணவிக்கு தொல்லை கொடுக்க தொடங்கினார். இதனால், மாணவி செய்வதறியாது திகைத்து நின்றார்.
இந்தநிலையில் மாணவியின் படத்தை அவரது உறவினர் ஒருவர் இணையதளத்தில் பார்த்துள்ளார். இதுபற்றி அவர் மாணவியிடம் கேட்ட போது, மாணவி நடந்த அனைத்தையும் கூறி கதறி அழுதார். இதைகேட்டு மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வாலிபர்கள் ஆல்வின் ஷைஜோ, ஆஷிக் ரெனால்டு ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு 2 பேரையும் தேடி வருகின்றனர்.
இந்த 2 வாலிபர்களும், பிளஸ்-1 மாணவியிடம் மட்டும்தான் இப்படி நடந்து கொண்டனரா? இல்லை இன்னும் ஏராளமான பெண்களிடம் இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே வாலிபர் காசியின் லீலைகள் அம்பலமாகி குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் மாணவி ஒருவரை மிரட்டியதுடன், அவரது ஆபாச படம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால் குமரியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.