தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணைக்கு நன்றி கடனாக அதிமுகவுடன் இருப்போம்✍️ தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன்✍️முழுவிவரம் -விண்மீன் நியூஸ்
தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணைக்கு நன்றி கடனாக அதிமுகவுடன் இருப்போம் – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன்.
கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு சென்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனுக்கு இனாம்மணியாச்சி பஸ் நிறுத்தம் அருகே அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநிலப் பொருளாளர் அய்யாத்துரைப்பாண்டியன், வடக்கு மாவட்ட தலைவர் சுப்புராஜ், மாவட்டப் பொருளாளர் தாமஸ்பாண்டியன், தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலர் லாரன்ஸ், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், விவசாயி அணி மாவட்டச் செயலர் சமுத்திரவேலு, கயத்தாறு ஒன்றியச் செயலர் குட்டியப்பன், கோவில்பட்டி ஒன்றிய துணைச் செயலர் குமார், நகரச் செயலர் ராசுபாண்டியன், நகர தலைவர் பேச்சியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஜான்பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில் எங்களது 40 ஆண்டு கால கோரிக்கையான 7 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணை அறிவிப்பை மகிழ்ச்சியுடன் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்காக தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும். தேவேந்திர குல வேளாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரதமரை பாராட்டி வருகின்றனர். இது தொடர்பாக பல முதல்வர்களை சந்தித்து மனு அளித்தோம். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையினால் மத்திய அரசு இந்த அரசாணை அறிவிப்பை வழங்கியுள்ளது. இந்த மகிழ்ச்சி, எழுச்சி வரும் சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயமாக பிரபலிக்கும். அதிமுகவுடன் கூட்டணிக்கு தான் வாய்ப்பு என்றும், தேவேந்திர குல வேளாளர் என்ற அரசாணைக்கு நன்றி கடனாக வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் இருப்போம். தேர்தல் தேதி அறிவித்த பின், நான் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், திமுக செய்த தவறுகளை சுட்டி காட்டி வருகின்றோம். எதிர்கின்ற சூழ்நிலை வந்தால் யாராக இருந்தாலும் எதிர்போம். திமுக தவறு இழைக்கிறது. நல்ல செய்தியை பிரதமர் அறிவித்துள்ளார். இதனை அவர்களை (திமுக) சார்ந்த ஊடகங்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால் இந்த மக்கள் மீது அவர்கள் வெறுப்புக் கொள்கிறார்கள் என்று தான் அர்த்தம். மேலும் இந்துத்துவா கொள்கையை எதிர்கின்றனர். நாங்கள் இந்துத்துவா கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம். இந்துத்துவா கொள்கை என்பது இந்து மக்களை ஏற்றுக் கொள்வது, ஆனால் திமுக ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறு பிரச்சனைகள் இருப்பதால் அவர்களாக ஒதுங்கிக் கொண்டு செல்கிறார்கள். திமுகவினர் வெறுப்புகளை சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.