ஆய்வாளர்கள் கண்களில் படாமல் போன கல்யாணபூண்டி கிராமம் நடவடிக்கையெடுக்குமா அரசு?
ஆய்வாளர்கள் கண்களில் படாமல் போனது எப்படி?
கல்யாணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர் சௌந்தர், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். எப்படியும் ஆறேழு மாதங்கள் இருக்கும். என்னைத் தொடர்பு கொண்டு கேட்டார்: எங்க ஊருக்கு எப்போது வருவீங்க?
கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி தான் இதற்கு நேரம் வந்தது. கல்யாணம்பூண்டி கிராமத்திற்குள் காலடி எடுத்து வைத்தோம்.
அந்த நிமிடங்களில் என்னை ஆச்சரியப்பட வைத்த விசயம், வயல்களில் வரப்புகளில் எல்லாம் சிதறிக் கிடந்த பானை ஓடுகள். ஊருக்கு வெளியே நங்காத்தூர் மலையை ஒட்டிய பகுதிகளில் கூட பானை ஓடுகள்!
இவற்றின் காலக் கணிப்புகளில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் வரலாற்றுத் தடயங்கள் என்பதில் ஐயமில்லை.
சரி, இவை இங்கு எப்படி வந்தன?
மேற்கே முசுப்பூர் ஏரியை ஒட்டி தான் முன்பு ஊர் இருந்ததாகவும், பின்னர் இப்போது இருக்கிற இடத்தில் ஊர் ஏற்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள். இதில் உண்மையும் இருக்கலாம்!
அந்த அழிவின் நீட்சிதான் இப்போது புவியின் மேற்பரப்பில் வெளிப்படத் தொடங்கி இருக்கிறது.
அதைவிட ஆச்சரியம், எழுத்துப் பாறையில் அணிவகுத்து நிற்கும் பெருங்கற்கால ஓவியங்கள்.
வனப்பகுதியில் அமைதியாக அமர்ந்து இருக்கும் பிற்காலச் சோழர்களின் சண்டிகேஸ்வரர்.
செஞ்சி நாயக்கர்கள் ஆட்சியிலும் இங்கிருந்து கல் தூண்கள் பயணப்பட்டு இருக்கின்றன.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைத் தன்னுள் புதைத்து வைத்துள்ள பூமி, கல்யாணம்பூண்டி! இன்னமும் கூட ஏராளமான வரலாற்றுத் தடயங்கள் இருக்கலாம்!
இப்போதும் நமக்கு ஆச்சரியம் தான்! இந்த இடம் இத்தனை ஆண்டுக் காலம் நம் ஆய்வாளர்களின் கண்களில் படாமல் போனது எப்படி?
இந்நேரத்தில், என்னுடன் சளைக்காமல் பயணித்து வரும் நண்பர்கள் திருவாமாத்தூர் சரவணக்குமார், விழுப்புரம் விஷ்ணு ஆகியோருக்கு நன்றிகள்..!
கல்யாணம்பூண்டி மண்ணின் மைந்தர்கள், அந்த ஊர் வரலாற்றை எப்படியும் வெளிக்கொணர வேண்டும் எனத் துடிக்கும் திருவாளர்கள் சௌந்தர், மணி ஆகியோருக்கும் நன்றிகள் பல..!
?????winmeennews.com?????