கோவில்பட்டியில் தனியார் பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் டேங் வெடித்து ஒருவர் பலி – ஒருவர் காயம்✍️முழுவிவரம் – விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் தனியார் பெட்ரோல் பல்க்கில் பெட்ரோல் டேங் வெடித்து ஒருவர் பலி – ஒருவர் காயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் வினோத்குமார் சொந்தமான ஏ.ஆர்.ஏ.எஸ் பெட்ரோல் மற்றும் டீசல் பல்க் உள்ளது. இந்த பல்கில் இருக்கும் பெட்ரோல் டேங்கில் மழைநீர் கலந்த காரணத்தினால் கடந்த 16ந்தேதி முதல் இந்த பல்க்கில் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டு இருந்தது.இந்நிலையில் மழை நீர் கலந்த பெட்ரோலை அகற்றும் பணியில் தனியார் நிறுவனத்தினை சேர்ந்த ஊழியர்கள் ரகு, பாலசுப்பிரமணியன், தியாகராஜன் ஆகிய 3 பேர் பணியில் ஈடுபட்டனர். 3பேரும் தென்காசிமாவட்டம் பாப்பன்குளத்தினை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு உதவியாக பெட்ரோல் பல்கில் பணிபுரிந்த கோவில்பட்டி தாமஸ் நகரை சேர்ந்த ஜஸ்டின் இருந்துள்ளார். பெட்ரோலை வெளியேற்றி விட்டு உள்ளே சுத்தம் செய்யும் பணியில் ரகு ஈடுபட்டுள்ளார். அப்போது உள்ளே அதிகமான வெப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். வெப்பத்தினை குறைப்பதற்காக சிறிய பேன் மூலமாக காற்றினை செலுத்தியுள்ளனர். அப்போது தீடீரென பெட்ரோல் டேங்கில் இருந்து சத்தம் கேட்டுள்ளது. மேலும் டேங்கில் இருந்து ரகு, அருகில் இருந்த ஜஸ்டின் ஆகியோர் தூக்கி எறிந்து வீசப்பட்டுள்ளனர். இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ரகுவிற்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேற்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லமால் ரகு பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிழக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். பெட்ரோல் டேங்கில் இருந்த வந்த புகையினை தீயணைப்பு துறையினர் அணைத்தனர். விபத்து குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.