கோவில்பட்டியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிபிஎம் சாலை மறியல்: 35 பேர் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிபிஎம் சாலை மறியல்: 35 பேர் கைது
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அண்ணா பேருந்து நிலையம் முன்பிருந்து ஊர்வலமாக சரக்கு சேவை வரி அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அவர்களை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அய்யப்பன் தலைமையில், உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் மற்றும் போலீஸார் தடுத்தனர். அதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இளையரசனேந்தல் சாலை சந்திப்பு அருகே சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், ரவீந்திரன், ஒன்றியச் செயலர்கள் தெய்வேந்திரன் (கோவில்பட்டி), புவிராஜ் (விளாத்திகுளம்), சாலமன்ராஜ் (கயத்தாறு), கிருஷ்ணவேணி, ராமசுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.