திருத்தணியில் தொடங்கும் பாஜக வேல் யாத்திரை- தொடக்க விழாவில் குஷ்பு பங்கேற்கிறார்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
பாஜக வேல் யாத்திரை- தொடக்க விழாவில் குஷ்பு பங்கேற்கிறார்
தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் வெற்றிவேல் யாத்திரை என்ற பெயரில் பிரமாண்ட அரசியல் யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரை வருகிற 6-ந் தேதி திருத்தணியில் தொடங்குகிறது.
அங்கிருந்து புறப்பட்டு அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த யாத்திரை செல்கிறது. தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெறும் யாத்திரையை அனைத்து மாவட்டங்களிலும் பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.69 இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளன. அங்கு அகில இந்திய அளவில் தலைவர்களை வரவழைக்கவும் திட்டமிட்டு உள்ளார்கள். அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி வெற்றிவேல் யாத்திரை திருச்செந்தூரில் நிறைவடைகிறது. நிறைவு விழாவில் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நடிகை குஷ்பு வெற்றிவேல் யாத்திரையில் பங்கேற்கிறார். திருத்தணியில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். தொடர்ந்து ஒரு மாதம் நடைபெறும் யாத்திரையில் கட்சி தலைமை வேறு எந்த இடங்களில் எல்லாம் பிரசாரத்தில் கலந்து கொள்ள அழைக்கிறதோ அங்கெல்லாம் கலந்து கொள்வேன் என்றார்.