கோவில்பட்டியில் பொதுக்கழிப்பிடம் கட்டவலியுறுத்தி நூதன ஆர்பாட்டம்
பொதுக்கழிப்பிடம் கட்ட வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி கடலைக்காரத் தெரு மற்றும் தங்கம்மாள் கோயில் தெரு பகுதியில் பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட கடலைக்காரத் தெரு சந்திப்பில் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடமும், அதனருகே உள்ள தங்கம்மாள் கோயில் தெருவில் ஆண்களுக்கான பொதுக் கழிப்பிடமும் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுக் கழிப்பிடத்தை அகற்றினர்.
இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பாதசாரிகள் உள்ளிட்டோர் திறந்தவெளியிலே சிறுநீர் கழிக்கும் நிலை பழக்கத்தில் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு மட்டுமின்றி, அவ்வழியாகச் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் முகம்சுழிக்கும் நிலை ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி, அச்சாலை மிகவும் சேறும்சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே, இப்பகுதியில் உள்ள வாறுகாலை புழக்கத்திற்கு கொண்டுவரும் வகையில் அதில் உள்ள அடைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுக் கழிப்பிடம் கட்ட வேண்டும். சுகாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
தூர்நாற்றம் வீசுவதைத் தவிரக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கம்மாள் கோயில் தெருவில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலர் சரோஜா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ், ஒன்றியச் செயலர் பாபு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், நகர துணைச் செயலர் அலாவுதீன், நகரக் குழுவைச் சேர்ந்த விஜயலட்சுமி, முருகேசன், ஆதிமூலம், சிதம்பரம், மாரியப்பன், பழனிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.