சிதம்பரம் நடராஜர் கோயிலில் தொழிலதிபர் மகள் திருமணம் தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை பரபரப்பு
ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த தொழிலதிபர் மகள் திருமணம்! – சிதம்பரம் தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டத்தில் கடந்த 11-ம் தேதி சிவகாசி பட்டாசு தொழிலதிபர் மகளின் திருமணம் விதிமுறைகளை மீறி நடந்ததாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபம்.
இந்தத் திருமணத்தின்போது நடராஜர் சந்நிதியில் உள்ள பொற்சபையில் ஏறி பூ அலங்காரம் செய்தது, கோயில் வளாகத்தில் ஷூ அணிந்து வலம் வந்தது, ஆயிரம்கால் மண்டபத்தை ஆடம்பரமாக அலங்கரித்தது என அனைத்து படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது
இது தொடர்பாக பொதுமக்கள், பக்தர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். இதற்கு தீட்சிதர்கள் தரப்பில், தவறு நடந்துவிட்டதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என்று உறுதியளித்து, பிரச்னைக்கு காரணமான பட்டு தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் எனவும் விளக்கமளித்தனர். இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி பொருளாளர் கோபிநாத், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
தீட்சிதர்களிடம் போலீஸார் விசாரணை
அதில், `நடராஜர் கோயிலில் விதிமுறைகளை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் தொழிலதிபர் இல்லத் திருமணம் நடத்த அனுமதியளித்த தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவுசெய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தில் தீட்சிதர்களிடம் சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்திகேயன் விசாரணை நடத்தினார்.
அப்பொழுது பிரச்னைக்கு காரணமாகி சஸ்பெண்டு செய்யப்பட்ட பட்டு தீட்சிதர் மற்றும் 6 தீட்சிதர்கள் பங்கேற்றனர். புகார் அளித்த கோபிநாத்தும் உடனிருந்துள்ளார். விசாரணையின்போது தீட்சிதர்கள் திருமணம் நடந்தது தவறுதான் என்றும் விளக்கமளித்துள்ளனர்.
தீட்சிதர்களிடம் போலீஸார் விசாரணை
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த விசாரணையின் முடிவில் வரும் 23-ம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்படும். அப்பொழுது, கோயிலில் திருமணம் நடத்த அனுமதி பெற்றவர்கள், திருமணத்துக்காக அலங்காரம் செய்தவர்கள் உட்பட அனைவரையும் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. சிதம்பரம் காவல் நிலையத்தில் தீட்சிதர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.