போலி காரணம் கூறி இபாஸ் -ஊரடங்கு காலத்தில் சென்னைக்கு ஆட்களை கொண்டு போய்விடும் கும்பலைச்சேர்ந்த 3 பேர் கைது ,வாகனம் பறிமுதல்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
போலி காரணம் கூறி இபாஸ் -ஊரடங்கு காலத்தில் சென்னைக்கு ஆட்களை கொண்டு போய்விடும் கும்பலைச்சேர்ந்த 3 பேர் கைது ,வாகனம் பறிமுதல்
✍கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆந்திரா செல்வதற்கு இ.பாஸ் பெற்று வங்கி கணக்கு மூலமாக மற்றும் ரொக்கமாக ரூபாய் 3500/- வீதம் வாங்கிக்கொண்டு சென்னைக்கு ஆட்களை கொண்டு போய்விடும் கும்பலைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து, வாகனத்தை திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் விழிப்புடன் செயல்பட்ட போலீசாருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
✍தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், (12.07.2020) இரவு சுமார் 9 மணியளவில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் முருகா மடம் சந்திப்பில் வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தனர், அப்போது அந்த வழியாக வந்த இன்னோவா காரை மறித்து சோதனை செய்தனர், அதில் வாகனம் மூலம் தலா 3500 ரூபாய் பெற்றுக் கொண்டு 5 நபர்களை உடன்குடியிலிருந்து சென்னைக்கு இ.பாஸ் இல்லாமல் கொண்டுபோய் விடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு சென்னை செல்வதற்கு திருமணத்திற்காக ஆந்திரா செல்வதாக கூறி இ.பாஸ் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
✍இதுதொடர்பாக, திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனரான திருச்செந்தூர், இடையன்விளை, தெற்கு தெருவைச் சேர்ந்த தேவசுந்தரம் மகன் மனோகர் யுவராஜா (வயது37), வாகனத்தின் உரிமையாளர் உடன்குடி சுல்தான்புரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ராமச்சந்திரன் என்ற சந்திரன் (வயது42), உடன்குடி, சிறுநாடார் குடியிருப்பு, மேலத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுந்தரலிங்கம்(வயது40), மேற்படி நபர்களுக்கு ஆந்திரா இ.பாஸ் பெற்று தந்த உடன்குடியைச்சேர்ந்த கணபதி மகன் ரவிச்சந்திரன் ஆகியோர்களை கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் இவர்கள் லாக் டவுன் கடுமையாக உள்ள இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்களை இவ்வாறு அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகிறது.
✍இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விழிப்புடன் செயல்பட்ட திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசாரை பாராட்டினார். மேலும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.