சிறைச்சாலை கைதிகளின் குடும்பத்துடன் வீடியோகால் பேச்சு ? கைதிகளின் மனஅழுத்தம் போச்சு ? கொரோனாவால் ஏற்ப்பட்ட . சலுகை? முழு விவரம் – விண்மீன்நியூஸ்
கொரோனாவால் கிடைத்த சலுகை குடும்பத்துடன் ‘வீடியோ கால்’ பேச்சு கைதிகளின் மனஅழுத்தம் போச்சு
தினமும் 2 ஆயிரம் பேர் பேசி மகிழ்கிறார்கள்
கிளை சிறைகளுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை
சேலம்: கொரோனா ஊரடங்கு நேரத்தில் மனஅழுத்தம் போக்கும் வகையில், உறவினர்களுடன் வீடியோ காலில் கைதிகள் பேசி வருகின்றனர். தமிழகத்தில் மத்திய சிறைகளுக்கு மட்டும் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு மாவட்டம், கிளை என்று அனைத்து சிறைகளுக்கும் மிகவும் அவசியம் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் கொல்லி நோயான கொரோனாவால், சிறைக்கைதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை பார்க்க உறவினர்கள் செல்வார்கள். அதற்கான மனுவை எழுதி, கைதியை பார்க்க அதற்கான அறைக்கு செல்ல வேண்டும். குறைந்தது 10 கைதிகளை அந்த அறைக்கு அழைத்து வருவார்கள். அவர்களின் உறவினர்கள் 20 பேர் நிற்பார்கள். அதன்பிறகு அங்கு நடக்கும் காட்சி அனைவரையும் கண்கலங்க செய்யும். கைதிக்கும், உறவினர்களுக்கும் இடையில் 10 அடி இடைவெளியில் கம்பி வலை போடப்பட்டிருக்கும். ஒரு பகுதியில் கைதிகளும், இன்னொரு பகுதியில் உறவினர்களும் நின்று நலம் விசாரிப்பார்கள். யார் என்ன பேசுகிறார்கள்? என்பது யாருக்கும் தெரியாது. 30 பேர் ஒரே நேரத்தில் கத்தி கத்தி பேசுவார்கள். இறுதியில் நா வறண்டு வெளியே வருவார்கள். என்ன சொல்ல வந்தோம் என்பதை மறந்து, கைதியை பார்த்த மகிழ்ச்சியில் திரும்பி செல்வார்கள். ஒவ்வொரு முறையும் இதே நிலைதான் நீடிக்கும்.
இந்த காட்சியை மாற்ற எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்தாலும், அது வெற்றி பெறவில்லை. இறுதியில் கொரோனா என்ற கொடிய நோய், கைதிகளின் குமுறலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் கைதிகள், அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் செல்போன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலையடுத்து, சிறைக்கு நேரடியாக வந்தால் மற்ற கைதிகளுக்கு நோய் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை புழல், கோவை, மதுரை, வேலூர், பாளையங்கோட்டை, திருச்சி, சேலம், கடலூர் ஆகிய மத்திய சிறைகளில் இப்படி செல்போன் வீடியோ காலில் பேசும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மத்திய சிறையிலும் 10 செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளது. தினமும் அவர்கள் 7 நிமிடம் பேசி வருகிறார்கள். இதன்படி ஒவ்வொரு நாளும் சுமார் 2ஆயிரம் கைதிகள் உறவினர்களுடன் பேசி மகிழ்கின்றனர். ஒரு கைதி, தான் யாருடன் பேச வேண்டும் என்பதற்கான செல்போன் எண்ணை சிறை அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும். வாரத்திற்கு 3 நாட்கள் விசாரணை கைதிகளுக்கும், 2 நாட்கள் குண்டர் தடுப்புசட்ட கைதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட நாளில் வீடியோ காலில் சிறையில் இருந்து அழைக்கப்படும். அப்போது மனைவி மற்றும் குடும்பத்தினரை வீடியோவில் பார்த்துக்கொண்டே பேசி மகிழ்கின்றனர். அதேநேரத்தில் மத்திய சிறைகளில் மட்டும் இருக்கும் வீடியோ காலில் பேசும் வசதியை, மாவட்ட மற்றும் கிளைச்சிறைகளிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், கைதிகளின் மனஅழுத்தம் குறையும் என்பதே காரணம். இதுகுறித்து சட்டம் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியதாவது:-கொரோனா ஊரடங்கால் நீதிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகள் மட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கிளைச்சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு ஜாமீன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் குடும்பத்தினரை பார்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள். மத்திய சிறைகளில் உள்ளது போல் வீடியோ கால் வசதி மாவட்ட மற்றும் கிளைச்சிறைகளுக்கும் விரிவுபடுத்தினால் கைதிகள் பயன் அடைவார்கள். அவர்களின் மனஅழுத்தமும் வெகுவாக குறைந்து விடும். எனவே, மத்திய சிறைகளில் உள்ள வீடியோ கால் பேசும் வசதி, மாவட்டம் மற்றும் கிளை சிறைகளுக்கும் அவசியம் வேண்டும் என்றனர்.
முறைகேடுகளுக்கு முடிவு கட்டிய திட்டம்
வீடியோ கால் பேச்சு மூலம், சிறையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு உறவினர்கள் பழம், பிஸ்கெட் கொண்டு வருவார்கள். ஆனால் அது முழுமையாக கைதிகளின் கைகளுக்கு செல்லாது. இடையில் இருக்கும் வார்டன்கள் அபேஸ் செய்து கொள்வார்கள். அந்த கெட்டப்பெயர் இதன் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கைதியை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் செலவும் மிச்சமாகிறது. கைதிகளின் நண்பர்களும் சிறைக்கு பார்க்க வருவார்கள். அப்போது கஞ்சா பொட்டலம் வீசி செல்வார்கள். அதுவும் தற்போது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேசும் அனைத்தும் பதிவு
வீடியோ கால் பேசும்போது கைதியுடன் 2 வார்டன்கள் இருப்பார்கள். அவர் என்ன பேசுகிறார் என்பதை கவனித்துக்கொண்டிருப்பார்கள். எதிர்தரப்பினரை பழிக்கு பழிவாங்க வேண்டும் என்பது போன்று பேசினால், அவருக்கு உறவினர்களுடன் பேசுவதற்கு தடை விதிக்கப்படும். அதே நேரத்தில் அவர் பேசும் அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது.