கடலூர் திட்டக்குடி அருகே அதிர்ச்சி: மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்துக்கொன்று வீட்டிலேயே குழிதோண்டி புதைத்த மகன் கைது
மது குடிக்க பணம் தராததால் தாயை அடித்துக்கொன்று வீட்டிலேயே குழிதோண்டி புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52), இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (46). இவர்களின் இரண்டாவது மகன் ஷேவாக் (21). ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்தவர் அதன்பின் வெளியூர் செல்லவில்லை. இங்கேயே தங்கி விட்டார். குடிப்பழக்கம் உள்ள இவர் வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது தாயாரிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் தாயை கட்டையால் சரமாரி தாக்கி உள்ளார். இதில் கஸ்தூரி படுகாயமடைந்து இறந்துள்ளார். இதையடுத்து வீட்டில் யாருமில்லாததால் வீட்டிலேயே குழி தோண்டி தாயை சடலத்தை புதைத்து விட்டார். அதன்பின்னர் ஷேவாக் வெளியே சென்று விட்டார். இந்நிலையில் உறவினர்கள் கஸ்தூரியை காணாததால் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதற்கிடையே இன்று காலை கஸ்தூரியின் மூத்த மகள் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். இதையறிந்த ஷேவாக் தனது சகோதரியிடம் புகார் கொடுக்க வேண்டாம். தேடிப்பார்ப்போம் என்று கூறி உள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போதுதான் தாயை கொன்று புதைத்ததை சகோதரியிடம் ஷேவாக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ேபாலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆவினங்குடி போலீசார் விரைந்து சென்று வீட்டில் புதைக்கப்பட்டிருந்த கஸ்தூரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு கயிற்றால் கை, கால்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த ஷேவாக்கை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.