மாற்றுத்திறனாளிகள் தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
மாற்றுத்திறனாளிகள் தினம்:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
‘அரசின் திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்’
சென்னை, டிச.3–
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின” வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பேணிக் காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3–ம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தில் அனைத்து உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்று சிறப்புடன் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது.
சலுகைகள், உதவிகள்
குடும்பத்தில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அந்தக் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்; பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள்; மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்; கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல்;
மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை; மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1500 மாதாந்திர உதவித் தொகை வழங்குதல், இந்தியாவிலேயே முதன்முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரப் பணிக்கு முழு நாள் ஊதியம் வழங்குதல்; பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித வீடுகள் ஒதுக்கீடு,
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து, அக்குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவும், தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித் தொகை, போன்றவற்றை வழங்குவதற்கும், அவர்களுடைய வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்ள தக்க ஆலோசனைகளை வழங்குவற்கும் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம் நிறுவியது, போக்குவரத்து நெரிசல்மிக்க இடங்களில் பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக சென்னையில் 150 இடங்களில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது போன்ற பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வருகிறது.
இந்த இனிய நாளில், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுதந்திரமாக வாழ்வதற்கு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
.