திமுகவா அதிமுகவா இல்லை பாமகவா விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம் சர்ப்ரைஸ் ரிசல்ட்? அரசியல் களம் பரபரப்பு?
திமுகவா.. அதிமுகவா.. இல்லை பாமகவா.. விடுதலை சிறுத்தைகள் யாருடன் சேரலாம்.. சர்ப்ரைஸ் ரிசல்ட்!
சென்னை: அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது.. யார் யாருடன் கூட்டணி என்ற பேச்சும் கிளம்பி விட்டது.. திருமாவளவன் யாருடன் கூட்டணி வைப்பார்? ரஜினியா, திமுகவா என்ற கேள்விகள் கச்சை கட்டி கிளம்பி விட்டன.
தமிழகத்தில் பெரும்பாலும் சாதி கட்சிகளை சார்ந்துதான் அரசியல் களம் நகர்ந்து வருகிறது… ஜாதிக்கான கட்சிகள் தவிர பிற கட்சிகளும் கூட ஜாதி அடிப்படையில்தான் சீட் தருகின்றன.. அப்படி இல்லை என்று எந்தக் கட்சியாவது சொன்னால் அது பச்சை பொய் என்று அர்த்தம். தமிழகத்தின் மிக முக்கியமான கட்சிகளில் ஒன்று பாமகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும்.
இந்த இரு கட்சிகளையும் திராவிட கட்சிகள் தங்கள் பக்கம் கெட்டியாக சாய்த்து பிடித்துகொள்ளும்.. ஒரு திராவிட கட்சி பாமகவை இழுத்து கொள்ளும் என்றால் மற்றொன்று, விசிகவை வளைத்து கொள்ளும்.. ஆனால், இவைகளை ஒன்றுசேர விடாமலும் திராவிட கட்சிகள் கவனமாக பார்த்து கொள்ளும். ஏனென்றால் இவர்கள் இணைந்தால் வட தமிழகமே இவர்கள் வசம் மட்டும்தான் இருக்கும் என்ற நிதர்சனம்.
சறுக்கல்கள்
அந்த வகையில், விசிக வரும் சட்டமன்ற தேர்தலை எந்த வகையில் எதிர்கொள்ள போகிறது, யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுவிட்டது.. கடந்த எம்பி தேர்தலின்போதே, பல அசௌகரியங்களையும், சிக்கல்களையும் விசிக சந்தித்தது.. கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பின்மை, சின்னம் பிரச்சனை, பிரச்சாரத்துக்கு மறுப்பு என பல விவகாரங்கள் எழுந்தன… ஆனாலும் இன்றுவரை திமுக கூட்டணியில் அங்கம் வகித்து, கூட்டணி தர்மத்தை விசிக கடைப்பிடித்து வருகிறது. இதேபோலவே, வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடருமா என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
திருமாவளவன்
அதேபோல, ரஜினிகாந்த்தும் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லி உள்ளதால், திருமாவளவன் ஒருவேளை அங்கு கூட்டணி வைக்க முற்படுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.. இதற்கு காரணம், 2 வருடத்துக்கு முன்பு ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி’ என்று ரஜினிகாந்த் அறிவிக்கப்பட்டபோதே அதை வரவேற்ற முக்கிய அரசியல் புள்ளிகளில் திருமாவளவனும் ஒருவர்… ரஜினியின் இந்த அறிவிப்பு அப்போது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியபோதே, “கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை இட்டு நிரப்பும் ஆற்றல் ரஜினிக்கு உள்ளது” என்று சொன்னவர்தான் திருமாவளவன். இது எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினிக்கு நெருக்கமானவரும்கூட!
கருத்து கணிப்பு
அதனால், திமுகவா, ரஜினியா? “யாருடன் திருமாவளவன் கூட்டணி வைப்பார்” என்று நம் வாசகர்களிடமே ஒரு சின்ன கருத்து கணிப்பு நடத்தப்பட்டது… “திருமாவளவன் யாருடன் கூட்டணி அமைத்தால் நல்லது?” என்பதுதான் கேள்வி.. அதற்கு “பாமகவுடன் இணையலாம்” என்பதற்கு 12.5 சதவிதம் பேரும், திமுகவே சிறந்தது என்பதற்கு 31.25 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். ரஜினி பக்கம் போகலாம் என்பதற்கு 25 சதவீதமும், தனித்து நிற்க வேண்டும் என்று 12.5 சதவீதம் பேரும், அவரை மதிக்கும் கட்சியுடன் சேரலாம் என்பதற்கு 18.75 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
பாமக
“பாமகவுடன் கூட்டணி வைக்கலாம்” என்பதற்கும், “தனித்து போட்டியிடலாம்” என்பதற்கும் ஒரேவித வாக்கு விழுந்துள்ளது.. அப்படியானால் சாதிரீதியான சம பலத்தை விசிக பெற்றுவிட்டதையே இது எடுத்து காட்டுகிறது… பாமகவுடன் கூட்டணி வைத்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதை தனித்து நின்றே பெற்றுவிடலாம் என்று விசிகவினரின் நம்பிக்கையையும் இது பிரதிபலிக்க செய்கிறது. காலங்காலமாக கூட்டணி என்றே இருந்துவிட்ட நிலையில், இந்த சதவீதம் விசிகவினருக்கு தெம்பை தரும் என்றும் நம்பலாம்.
கூட்டணி தர்மம்
அதேபோல, “திமுகவே சிறந்தது” என்றுஅதிகபட்சமாக 31.25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.. இது கூட்டணி தர்மத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.. திமுகவில்தான் திருமாவுக்கு நல்ல மரியாதை கிடைப்பதாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். “ரஜினியுடன் சேரலாம்” என்பதற்கு 25 சதவீதம் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.. ரஜினியின் பாஜக பிம்பம் திருமாவளவனுக்கு எந்த அளவுக்கு பொருந்தும்? அவரது ஆர்எஸ்எஸ் பார்வையை விசிகவினர் எப்படி அனுசரித்து ஏற்று கொள்வார்கள் என்பது தெரியவில்லை.. எனினும் இந்த வாக்கு சதவீதம், ஏதோ ஒரு நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
அர்த்தம் என்ன?
இது எல்லாற்றையும்விட மிக முக்கியமானது, “அவரை மதிக்கும் கட்சியுடன் சேரலாம்” என்று 18.75 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர் என்றால், இதன் அர்த்தம் என்ன? என்பதை விசிக உணர்ந்து கொண்டால் நல்லது என்றே தோன்றுகிறது! மொத்தத்தில் இந்த முறை முடிவெடுப்பதில் திருமாவளவனுக்கு மிகப் பெரிய சவால்கள் காத்துள்ளன என்பதே உண்மை!!