டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பல்வேறு பொருட்களின் வரியை உயர்த்த வாய்ப்பு?
டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்… பல்வேறு பொருட்களின் வரியை உயர்த்த வாய்ப்பு.
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் வரியை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையிலை, அடுத்த 4 மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி வசூலிப்பதற்காக 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 492 கோடி ரூபாயாக இருந்தது. இது ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு மூன்றாவது அதிகபட்ச வசூலாகும்.
நிதிநிலை அறிக்கையில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை எதிர்பார்க்கப்பட்ட 5 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பதிலாக இந்த காலகட்டத்தில் 3 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வசூலானது. இதனால், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதியை வழங்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.
இதன்காரணமாக ஜிஎஸ்டி வரி வருவாயை அதிகரிப்பதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெறும் 38-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது பற்றி ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது நடைமுறையில் உள்ள 5 சதவீத ஜிஎஸ்டி வரியை 10 சதவீதமாக உயர்த்தவும் 12 சதவீத வரி விகிதத்தை நீக்கிவிட்டு அதற்குட்பட்ட 243 பொருட்களை 18 சதவீத வரிவிதிப்பிற்குள் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இடத்தை வாடகைக்குவிடும் உரிமையாளர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதன்மூலம், வரிவகிதம் மேம்படுவதுடன், அரசுக்கு கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே. நடப்பு நிதியாண்டின் அடுத்த 4 மாதங்களுக்கு ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சத்து 10 கோடி ரூபாயாக மத்திய நிதியமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டாலும், உடனடியாக நடைமுறைக்கு வராது என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வசூலில் மாநிலங்களுக்கான பங்கீட்டுத் தொகையாக 35 ஆயிரத்து 298 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது கவனிக்கத்தக்கது.