கோவையில் கோவில்களில் தீ வைக்கப்பட்ட சம்பவம்- கஜேந்திரன் என்பவர் கைது?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவையில் கோவில்களில் தீ வைக்கப்பட்ட சம்பவம்- கஜேந்திரன் என்பவர் கைது!
கோவையில் கோயில்கள் அருகே டயர்களை எரித்து பரபரப்பை கிளப்பிய கஜேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை டவுன்ஹால் என்.எச்.சாலை ஐந்து முக்கு பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. அங்கு கோவிலை சுத்தம் செய்ய வரும் பெண், அங்கு ஒருவர் கோவில் முன்பு டயர்களை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதற்குள் அந்த நபர் அங்கிருந்து போய்விட்டார். உடன் கோவிலுக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு பழைய டயர் மற்றும் பிளாஸ்டிக் பைப்புகளை போட்டு யாரோ தீ வைத்து எரித்து விட்டு சென்றது தெரிய வந்தது. மேலும் கோவிலில் இருந்த சூலம் சேதப்படுத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
அதுபோல் கோவை ரெயில் நிலையம் முன்பு உள்ள சிறிய விநாயகர் கோவில் முன்பும் டயர்களை போட்டு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. அதேபோன்று கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு உள்ள விநாயகர் கோவில் முன்பும் டயர்களை போட்டு தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இவற்றை செய்தது சேலம் மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த கஜேந்திரன் என்று தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.