ஒன்பது ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில், தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு, கவர்னர் பதவி✍️60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், கவர்னர் வாய்ப்பு கிடைக்கவில்லையே என, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் அதிருப்தி✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
சென்னை : கடந்த ஒன்பது ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில், தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேருக்கு, கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், கவர்னர் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லையே என, தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு உயர் பதவிகள் இருந்தாலும், கவர்னர் பதவி என்பது மிகமிக முக்கியமானது. முதல்வர், மத்திய அமைச்சர் போன்ற பதவிகள் எல்லாருக்கும் எளிதில் கிடைத்து விடாது.
எவ்வளவுதான் அரசியலில் உழைத்தாலும், தேர்தலில் வெற்றி பெறும் தந்திரமும், சமூக பின்னணியும் இருந்தால்தான் முதல்வர், மத்திய அமைச்சர்களாக முடியும்.
ஆனால், அரசியல் சாசனபதவியான கவர்னர் பதவிக்கு, மத்திய அரசு மனம் வைத்தால் யார்வேண்டுமானாலும் வரலாம்.ஆட்சி செய்யும் அதிகாரம் இல்லாவிட்டாலும், மாநில அரசு நிர்வாகத்தின் தலைவர் கவர்னர்தான். முதல்வரை விட ஒருபடி மேலேஅனைத்து மரியாதைகளும் கவர்னருக்கு உண்டு.
சட்டசபையிலும் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல்அளித்தால்தான் சட்டமாகும். குடியரசு தினத்தின்று தேசிய கொடியேற்றும் அதிகாரமும், ஆண்டின் துவக்கத்தில் சட்டசபையில் உரையாற்றும் அதிகாரமும் கவர்னருக்கு உள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கவர்னர் பதவி, பல மூத்த அரசியல்வாதிகளின் பெருங்கனவாக உள்ளது. ஆனால், மத்தியியில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள பா.ஜ., – காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்குதான் இந்த வாய்ப்பு அதிகம்.
மத்தியில் பா.ஜ., 2014-ல் ஆட்சிக்கு வந்த பின், ஒன்பது ஆண்டுகளில், தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன், சதாசிவம், தமிழிசை, இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகிய, ஐந்து பேருக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், 60ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் காங்., இருந்தாலும், சி.சுப்பிரமணியம், சி.ரங்கராஜன், பா.ராமச்சந்திரன், ஜோதிவெங்கடாச்சலம், நரசிம்மன், ராமானுஜம் என்று தமிழகத்தை சேர்ந்த சிலரே கவர்னர்களாக இருந்துள்ளனர்.
மத்திய அரசில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க.,வும், ஒருசில ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில்இடம்பெற்ற அ.தி.மு.க.வும், வாய்ப்பிருந்தும் தங்கள் கட்சியை சேர்ந்த யாரையும் கவர்னராக்கவில்லை. கடந்த 1999-ல் தி.மு.க.,பரிந்துரையில், ஓய்வுபெற்றஐ.ஏ.எஸ்., அதிகாரியான எம்.எம்.ராஜேந்திரன், ஒடிசா கவர்னராக இருந்தார்.
தற்போது, தமிழக பா.ஜ., தலைவர்களாக இருந்தவர்கள், அடுத்தடுத்து கவர்னர்களாகி வரும் நிலையில், 60 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தும், தங்களுக்குகவர்னர் வாய்ப்பு கிடைக்கவில்லையே என,தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள் தங்களுக்குள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழக காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்திலிருந்து ஒரு எம்.பி., கூட கிடைக்காத போதும், கவர்னர், மத்திய அமைச்சர் என, முக்கிய பதவிகளை பா.ஜ., வழங்கி வருகிறது. இது, தமிழகத்தில் கால் பதிக்கும் பா.ஜ.,வின் தந்திரம் என்றாலும், 60 ஆண்டுகளில் காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
கடந்த 2004 – 2014ல் குமரிஅனந்தன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்,திண்டிவனம் ராமமூர்த்தி உட்பட பலரும், கவர்னர் பதவிக்கு தீவிரமாக முயற்சித்தபோதும், அப்போது, மத்திய அமைச்சர்களாக இருந்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் தடுத்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.