கயத்தாறில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் தொழில்கள் அனைத்தும் முடங்கியதால் பழனிவேல் ஆட்டோ சரிவர ஓடவில்லை✍️ நிதிநிறுவண கடனை திருப்புச்செலுத்த முடியாததால்,தொழிலுக்கு வைத்திருந்த லோடு ஆட்டோ பறிமுதல்✍️ ஃபைனான்ஸ் ஊழியர்களின் பேச்சால் மிகுந்த மனவேதனை✍️ நிதி நிறுவனத்தின் முன்பாகவே தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைப்பு✍️உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயில் கதறித் துடிப்பு✍️ அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பழனிவேல் உயிரிழப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் பழனிவேல். அவர் தனது மைத்துனர் அன்னாவி என்பவரது பெயரில் லோடு ஆட்டோ வாங்கி தொழில் செய்து வந்தார். லோடு ஆட்டோ வாங்குவதற்கு தன்னிடம் போதுமான நிதி வசதி இல்லாததால் நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றார்.
கொரோனா ஊரடங்கு காரணமாகத் தொழில்கள் அனைத்தும் முடங்கியதால் பழனிவேலின் ஆட்டோவும் சரிவர ஓடவில்லை. அதனால் லோடு ஆட்டோ வாங்குவதற்காக ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய கடனை கடந்த மூன்று மாதங்களாகத் திருப்பிச் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார்.
ஃபைனான்ஸ் நிறுவனத்தின் கடனை திருப்பிச் செலுத்தச் சொன்னபோது, பணம் கிடைத்ததும் பழைய பாக்கியையும் சேர்த்துக் கட்டிவிடுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனாலும், அதைக் கேட்க மறுத்த ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், இரு தினங்களுக்கு முன்பு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
அதனால் பழனிவேல மிகுந்த மன வேதனை அடைந்தார். இது தொடர்பாகத் தனியார் நிதி நிறுவனத்துக்குச் சென்று பேசினார். ஆனால் அவருக்கு ஆட்டோவை திருப்பிக் கொடுக்க மறுத்தஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், பழனிவேலுவை அவமரியாதையாகப் பேசியுள்ளனர்.
தொழிலுக்கு வைத்திருந்த லோடு ஆட்டோ பறிபோனதால் சோகத்திலிருந்த அவர், ஃபைனான்ஸ் ஊழியர்களின் பேச்சால் மிகுந்த மனவேதனை அடைந்தார். அதனால் அந்த நிதி நிறுவனத்தின் முன்பாகவே தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக் கொண்டார்.
உடல் முழுவதும் பற்றி எரிந்த தீயில் கதறித் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி பழனிவேல் உயிரிழந்தார்.
தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கையால் பழனிவேல் உயிரிழந்ததால் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் உறவினர்களும் பொதுமக்களும் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
நெல்லை சந்திப்பு காவல்துறையினர் பழனிவேல் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்., அதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றார்கள். கடன் தொகை கட்டாததால் ஆடோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.