சேலம்: சேலம் அருகே ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் போலீஸார் முன்னிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 பேரை தேடி வருகின்றனர்.
சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் போலீஸார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக்கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் துறையினர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 தரப்பினர் பேக்கரி முன்பு வாய் தகராறு செய்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மீண்டும் தகராறு செய்து
கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக கண்ணன் என்பவர் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது, ஏற்கெனவே தகராறு செய்த நபர்கள் அங்கு வந்ததால் மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. போலீஸார் முன்னிலையில் இருதரப்பினரும் காவல் நிலைய வளாகத்திலேயே மீண்டும் தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பைச் சேர்ந்த 2 பேர் மயங்கி விழுந்தனர். தடுக்க முயன்ற போலீஸாரும் நிலை தடுமாறினர்.
இது தொடர்பாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்