கோவில்பட்டியில் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் வழங்க கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தடையில்லாமல் வேலை வழங்க கோரிக்கை
மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் தடையில்லாமல் வேலை வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட பேரவை கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.
மாவட்ட தலைவர் இ.ஜெபஸ்டின்ராஜ் தலைமை வகித்தார். மாநில தலைவர் பா.ஜான்சி ராணி, மாநில செயலாளர் பி.முத்துக்காந்தாரி, மாவட்ட செயலாளர் ஆர்.முருகன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் எம்.சாலமன்ராஜ், பி.கண்ணன், மாவட்ட துணை தலைவர்கள் எஸ்.எம்.சக்கரையப்பன், பி.முத்துமாலை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான சட்டம் 2016-ஐ அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பராமரிப்பு தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையின்றி வேலை வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் வழங்க வேண்டிய சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். கோட்டாட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் மாதாந்திர கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். புதிய ரயில் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ள அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்ககான பெட்டியை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.