பார்மலின் ரசாயனம் கலந்த மீனைக்கண்டறிவது எப்படி? பார்மலின் சந்தேக புகார்க்கு ?
பார்மலின் ரசாயனம் கலந்த மீனைக் கண்டறிவது எப்படி?
இறந்த உடல்கள் அழுகிப் போகாமல் பாதுகாத்து வைக்க ’பார்மலின்’ என்ற வேதிப்பொருள் பயன்படுகிறது. கடலில் பிடிக்கப்பட்டு பல நாட்கள் ஆன மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க இந்த வேதிப்பொருள் மீனில் கலக்கப்பட்டு வருகிறது. இதைக் கண்டறிந்து தடுக்க உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பார்மலின் கலந்த மீன்களைக் கண்டறிவது எப்படி என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ராமகிருஷ்ணன் விளக்குகிறார்.
பார்மலின் கலந்த மீனை முகர்ந்தால் மூக்கில் எரிச்சல் ஏற்படலாம். அந்த மீனை உண்டால், வயிறு உபாதைகள் ஏற்படலாம். நாள்பட்ட அளவில் சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம்.
மீனை மூன்று, நான்கு முறை கழுவ வேண்டும். அப்படி கழுவினாலே பார்மலின் கரைந்து விடும். கழுவிய பிறகும் கெமிக்கல் இருப்பது போல் வாடை வந்தால் உணவுப் பாதுகாப்புத் துறையை தொடர்பு கொள்ளலாம். மீனைக் கொதிக்க வைக்கும் போது பார்மலின் ஆவியாகக் கூடும்.
ஒரு கொதிநிலை வந்தால் அது 65 டிகிரியாகும். இரண்டு முறை கொதிக்க வைக்க வேண்டும். அதாவது, 75 டிகிரியை எட்ட வேண்டும். அப்போது பார்மலின் ஆவியாக வெளியேறக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இதையும் தாண்டி ஏதேனும் வாடை வந்தால் புகார் கொடுக்கலாம்.
மீனின் கண்கள் நன்றாக உள்ளனவா, செவில் சிவப்பாக உள்ளதா, உடல் உறுதித்தன்மையுடன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கடையில் பல நாள்கள் வைத்திருந்த மீன் புதிது போல் இருந்தாலே பார்மலின் கலந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
பார்மலின் குறித்த புகார்கள் சந்தேகங்கள் இருந்தால் 94440-42322 என்ற எண்ணில் தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையைத் தொடர்பு கொள்ளலாம்.