5 இந்தியர்கள் மாயமான விவகாரம்?இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்த சீனா?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
அருணாச்சல பிரதேசம்: 5 இந்தியர்கள் மாயமான விவகாரம்… இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்த சீனா!
அருணாசலபிரதேச மாநிலம் மேல் சுபன்சிரி மாவட்டம் நச்சோ பகுதியை சேர்ந்த 7 இளைஞர்கள், கடந்த வெள்ளிக்கிழமை காட்டுக்கு வேட்டையாட சென்றனர். இந்திய-சீன எல்லை அருகே சென்றபோது, அவர்களில் 5 பேரை சீன ராணுவம் கடத்தி விட்டதாக, அவர்களிடம் இருந்து தப்பி கிராமத்திற்கு வந்த 2 இளைஞர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஐந்து இளைஞர்களும் கடந்த 1-ம் தேதி முதல் காணாமல் போன நிலையில், அவர்களை சீன ராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பதாக கிழக்கு அருணாச்சல பிரதேச எம்.பி. தபீன்கான் குற்றம்சாட்டினார். செப்டம்பர் 2-ம் தேதி, அவர்கள் எல்லை தாண்டி வந்ததாக சீன ராணுவம் தெரிவித்தது.
இதுகுறித்து சீன ராணுவத்திடம் இந்திய ராணுவம் ‘ஹாட்லைன்’ மூலம் முறையிட்டது. அதற்கு இன்னும் பதில் வரவில்லை என்று அருணாசலபிரதேசத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று முன்தினம் தெரிவித்தார். 5 பேரின் இருப்பிடம் தெரியவில்லை என்று அருணாசலபிரதேச போலீஸாரும் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர்கிரண் ரிஜிஜு, நேற்று புதிய தகவலை வெளியிட்டார். அவர் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் “இந்திய ராணுவம் அனுப்பிய ‘ஹாட்லைன்’ செய்திக்கு சீன ராணுவம் பதில் அளித்துள்ளது. காணாமல் போன 5 இளைஞர்களும் தங்கள் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக உறுதி செய்துள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
காணாமல் போன 5 பேரையும் நமது பகுதியில் ஒப்படைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, அந்த 5 இளைஞர்களையும், சீன பகுதியான தமாய் என்ற இடத்தில் இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்தது சீன இராணுவம். அவர்கள் கிபிது எல்லை சோதனை சாவடி வழியாக அருணாச்சல பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பிறகே வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.