பால்வியாபாரி வெட்டி கொலை?திருமணத்தை மீறிய உறவால் தகராறு?
திருமணத்தை மீறிய உறவால் தகராறு: பால் வியாபாரியை வெட்டிக்கொன்ற கும்பல்!
மதுரை மேல அனுப்பானடியில் முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சந்திர சேகர் என்பவரது மகன் ரமேஷ். இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகிறார். திருமணமான இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் சகோதரருக்கும், ரமேஷுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ரமேஷ், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவனியாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் ஈடுபட்டு தப்பிச்சென்ற செல்வம் உள்ளிட்ட 4 பேரை அவனியாபுரம் போலீசார் தேடி வருகின்றனர்.