ஜெராக்ஸ் எடுக்க வரும் பள்ளிமாணவிகளிடம் பாலியல் தொல்லை? உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது ? தலைமையாசிரியர் புகார்?
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நகல் எடுக்க வரும் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொல்லை அளித்ததாக நகலகம் உரிமையாளரை தலையாசிரியர் அளித்த புகாரின்பேரில் போக்ஸோசட்டத்தில் போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கோவில்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நிகழாண்டில் சுமார் 700 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவியர்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவின்பேரில் மாணவிகளிடம் ஆசிரியைகள் ரகசியமாக பாலியல் தொல்லை அளித்தவர் குறித்து வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர். அதில், பள்ளியின் அருகில் நகலகம் நடத்தி வரும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (52), நகல் எடுக்க செல்லும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தது தெரியவந்தது.
இதுகுறித்த குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜிமா, பள்ளிக்கு நேரில் சென்று புகார் அளித்திருந்த மாணவிகளிடன் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்ரீதரன் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட வளநாடு போலீஸார், சண்முகசுந்தரம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.