கச்சத்தீவுக்கு ராமநாதபுரம் மன்னர் உரிமை கோரலாம்: புதிய விவாதங்களை எழுப்பியுள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
திருச்சி: கச்சத்தீவுக்கு ராமநாதபுரம் மன்னர் உரிமை கோர முடியும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருப்பது புது விவாதங்களை எழுப்பி உள்ளது.
காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துவிட்டதாக பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. இதற்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, பத்தாண்டுக் காலம் ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடி கச்சத்தீவை மறந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
“கச்சத்தீவை தாரைவார்க்க எந்த இடத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புக்கொள்ளவில்லை. கச்சத்தீவை பற்றி பேச வந்த மத்திய அரசு குழுவினரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பிரச்சினையை தள்ளிப்போட முடியுமா என்று தான் கருணாநிதி கேட்டாரே தவிர, தமிழக அரசு சார்பில் அவர் சம்மதம் தெரிவித்தார் என்பதற்கு எந்த இடத்திலும் ஆதாரம் இல்லை,” என்றார் அமைச்சர் ரகுபதி.
கச்சத்தீவு ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்திய அரசு அன்றைக்கு இன்னொருவர் சொத்தைத்தான் தாரை வார்த்தது என்றார்.
“இது தவறு. ஆனால், ராமநாதபுரம் மன்னர் கச்சத்தீவைத் தாரைவார்க்க ஆட்சேபனை தெரிவித்திருக்கலாம். இன்றைக்கும்கூட ராமநாதபுரம் மன்னர் கச்சத்தீவுவுக்கு உரிமை கோர முடியும்.
“இது இரு நாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே, நெதர்லாந்தில் உள்ள உலக அமைதி நீதிமன்றத்தில் இரு நாடுகளையும் மனுதாரர்களாக சேர்த்து கச்சத்தீவு தன்னுடைய சொத்து என்று ராமநாதபுரம் மன்னர் வழக்கு தொடுக்க முடியும்,” என்றார் அமைச்சர் ரகுபதி.
சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி எதாவது ஒரு வகையில் கச்சத்தீவை மீட்க திமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.