பேஸ்புக்மூலம் 47வயதுமலேசியபெண்ணிடம் மாட்டிக்கொண்ட தேனி வாலிபர்?திருமணம் செய்ய தொந்தரவு?கூலிபடை வைத்து கொலை செய்யதிட்டம்?
முகம் பார்க்காமல் காதலித்து வந்த மலேசிய காதலியை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளைஞர் திருமணத்திற்கு மறுத்துள்ளார். ஆகவே, கூலிப்படை அனுப்பி காதலனை கொலை செய்ய முயன்ற விபரீதம் சம்பவம் ஒன்று காட்டுநாயக்கன்பட்டியில் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே காட்டுநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நேரு. இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் அவரது 2வது மகனான அசோக்குமார் (25) பெங்களூருவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலமாக மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் பகுதியில் இருந்து அமுதேஸ்வரி (47) என்ற பெயருடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அசோக்குமாரை சந்திப்பதற்காக மலேசியாவிலிருந்து அமுதேஸ்வரி தேனி வந்துள்ளார். அதுவரை முகநூலில் மட்டும் அமுதேஸ்வரியை பார்த்து வந்த அசோக்குமார் நேரில் பார்த்ததும் அவரது வயதின் மூப்பை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி உள்ளார். இதனால் மனமுடைந்த அமுதேஸ்வரி மலேசியாவிற்கு திரும்பி சென்றதாக தெரிகிறது.
தொடர்ந்து முகநூலில் இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமுதேஸ்வரியின் தொடர்பை துண்டித்துள்ளார் அசோக்குமார். இதனிடையே தனது பெயரை மாற்றிக் கொண்டு வேறொரு முகநூல் கணக்கை ஆரம்பித்த அமுதேஸ்வரி, நீ காதலிக்க மறுத்ததால் அமுதேஸ்வரி தற்கொலை செய்து கொண்டால் என்றும் நான் அமுதேஸ்வரியின் சகோதரி என்றும் அசோக்குமாரை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அவர் சொன்ன தகவலை கேட்ட அசோக்குமார் தன்னை மிரட்டிய பெண்ணிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளார். இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி அமுதேஸ்வரியின் சகோதரி என்று முகநூலில் மிரட்டிய பெண் தேனி வந்துள்ளார். அவரைப் சந்திக்க சென்ற அசோக் குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட அமுதேஸ்வரியே நேரில் இருந்ததை கண்ட அசோக்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ள அமுதேஸ்வரி அசோக் குமாரை கட்டாயப்படுத்தி உள்ளார். இதை ஏற்க மறுத்த அசோக்குமார் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இருவரையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், முகநூலில் அமுதேஸ்வரி என குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் விக்னேஸ்வரி என்று தெரிய வந்தது
இதையடுத்து, இருவரையும் சமாதானப்படுத்தி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு சமாதானம் ஆகாத விக்னேஷ்வரி வீரபாண்டி காவல் நிலையத்தில் அசோக்குமார் மீது புகார் அளித்துள்ளார். மீண்டும் இருவரையும் அழைத்து விசாரணை செய்த காவல்துறையினர்சமாதானம் பேசியுள்ளனர். பின்னர், விக்னேஷ்வரி அளித்த புகாரின் பேரில் அசோக் குமார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
இதையடுத்து சமாதானம் அடைந்த விக்னேஸ்வரி மலேசியாவிற்கு திரும்பி சென்று விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை தேனி மாவட்டம் போடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். அதில் தேனி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்த அசோக்குமாரை கொலை செய்ய தாங்கள் வந்துள்ளதாகவும், அதற்காக மலேசியாவில் இருந்து விக்னேஸ்வரி என்ற பெண் தங்களுக்கு பணம் கொடுத்து அவரைக்கொலை செய்ய அனுப்பியதாகவும் காவல்துறையினர் விசாரணையில் கூலிப்படையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சிக்கியவர்கள் பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், மதுரை என பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அய்யனார் (30), பாஸ்கரன் (47), முனியசாமி (21), ஜோசப் (19), லோகேஷ் (20), அன்பரசன் (24), திருமுருகன் (21), கார்த்தி (20), தினேஷ் (22), ராஜேஷ் (25) என தெரியவந்துள்ளது.