ரூ.7200 கோடி வங்கி மோசடி… 187 இடங்களில் சிபிஐ சோதனை
வங்கிகளில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்ற மோசடி தொடர்பாக, 187 இடங்களில் சிபிஐ போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கி மோசடிகள் தொடர்பாக 42 வழக்குகளை பதிவு செய்துள்ள சி.பி.ஐ. 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எஸ்.பி.ஐ, அலகாபாத் வங்கி, கனரா வங்கி, தேனா வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, மகாராஷ்டிரா வங்கி, பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் மோசடி நடைபெற்றிருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், நிதி மோசடியாளர்களையும், மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரிகளையும் குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 187 இடங்களில், சோதனை நடைபெற்று வருவதாகத் சிபிஐ தெரிவித்திருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சுர்ணா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சில முக்கியமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக, வங்கி மோசடி உள்ளிட்ட நிதி மோசடிகள் தொடர்பான அதிரடி சோதனைகளை சிபிஐ தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்த சோதனையில் குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் கிடைத்தால், அமலாக்கத்துறை, மற்றும் வருமானவரித்துறையினரோடு அதனை பகிர்ந்து கொண்டு, மோசடியாளர்களை கிடுக்கிப்பிடி விசாரணைக்கு ஆளாக்குவதோடு, அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளையும் சிபிஐ., தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.