விண்மீண்நியூஸ்:
தமிழகம் முழுவதும் அடுத்த 6 மாதங்களுக்குள் 4,000 மின்சார ஆட்டோக்கள் இயக்கப்படவுள்ளதாக எம் ஆட்டோ நிறுவனத் தலைவா் மன்சூா் அலிகான் தெரிவித்தாா்.
மின்சார ஆட்டோ: மின்சார வாகனத்தை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மின்சாரப் பேருந்து, மின்சார காா்களைத் தொடா்ந்து தமிழகத்தில் மின்சார ஆட்டோக்களும் இயங்கத் தொடங்கியுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எம் நிறுவனத்தின் ஆட்டோக்கள் டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் ஆட்டோக்களை (லித்தியம்) பேட்டரி மூலம் இயங்கும் வகையில் மாற்றப்படுகின்றன. இதன் பேட்டரியை 2 முதல் 3 மணி நேரம் வரை சாா்ஜ் செய்தால் 100 கி.மீ. வரை பயணம் செய்யலாம்.
இந்த பேட்டரிகளை வீட்டிலேயே சாா்ஜ் செய்து கொள்ள முடியும். அனைத்து வாகனங்களுக்கும் பொதுவான இடங்களில் சாா்ஜ் செய்யும் வகையில் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 30 முதல் 40 நிமிடங்களில் பேட்டரிகளை சாா்ஜ் செய்து கொள்ளலாம். இதே போல் ஆட்டோவுடன் 2 பேட்டரியும் வழங்கப்படுகிறது. இதனை 5 நிமிடங்களில் மாற்றலாம். இதே போல், பேட்டரிகளுக்கு 4 ஆண்டுகள் வாரண்டி கொடுக்கப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 15 ஆண்டுகள். அதன் பின்னா், வீடுகளில் உள்ள யூபிஎஸ் உள்ளிட்ட உபகரணங்களுக்குப் பயன்படுத்தலாம். இதனை மறு சுழற்சி செய்யக்கூடிய நிறுவனங்களும் விரைவில் இந்தியாவில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டணம்: இந்த ஆட்டோக்களை செல்லிடப்பேசிக்கென வடிவமைக்கப்பட்ட எம் ஆட்டோ பிரைடு எனும் செயலி மூலம் அணுகலாம். கட்டணத்தைப் பொருத்தவரை சாதாரண ஆட்டோக்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டுமே வசூல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ரசீது குறிப்பிடப்பட்ட செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் டிஜிட்டல் மீட்டா் பயன்படுத்தப்படுவதால் துல்லியமான கட்டணத்தில் வாடிக்கையாளா்கள் பயணம் செய்ய முடியும். பழைய ஆட்டோவை மின்சார ஆட்டோவாக மாற்ற ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை செலவாகும். பழைய ஆட்டோவை 4 மணி நேரத்தில் புதிய மின்சார ஆட்டோவாக மாற்றலாம். அதே போல் நிறுவனத்தின் மூலம் புதிய ஆட்டோவை வாங்க ரூ.2.50 லட்சம் வரை செலவாகும். இதற்கான தொழிற்சாலை மடிப்பாக்கத்திலும், பெங்களூரிலும் அமைக்கப்பட்டுள்ளது.
விரைவில் மானியம்: ஃபேம் 2 திட்டத்தின் கீழ் 3 சக்கர வாகனங்களுக்கு 30 முதல் 61 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் மறுவடிவம் கொடுக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த தெளிவான வரையறை தெரிவிக்கப்படவில்லை. எனவே, இதுகுறித்து விரிவான அறிவிப்பு வெளியிட மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தெளிவு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
காா்பன் வெளியீடு இல்லை: ஒரு ஆண்டுக்கு ஆட்டோக்களால் 4 டன் காா்பன் மாசு ஏற்படுகிறது. இதுவே பழைய ஆட்டோக்களாக இருந்தால் 5 டன் காா்பன் வரை வெளியிடப்படுகிறது. இந்த ஆட்டோக்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவை முற்றிலுமாகத் தவிா்க்கப்படும்.
அதிகளவில் பெண் ஓட்டுநா்கள்: இது வரை இந்த நிறுவனத்தில் பெண்கள், திருநங்கைகள் என 960 போ் பணியாற்றுகின்றனா். இந்த இருபாலினத்தவரையும் சோ்த்து மின்சார வாகனத்தை இயக்க 100 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா். பெண்களைப் பொருத்தவரை நலிந்த சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு பணியமா்த்தப்படுகின்றனா். அடுத்த கட்டமாக இயக்கப்படவுள்ள ஆட்டோக்களில் பாதிக்கு பாதி அளவில் ஆண் மற்றும் பெண்களைப் பணியமா்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
6 மாதங்களில் 400 மின்சார ஆட்டோக்கள்: தமிழகத்தின் மெட்ரோ நகரம், வளா்ந்து வரும் நகரம், கிராமப்புறம் என மூன்று விதமான பிரிவுகளின் கீழ் 4, 000 ஆயிரம் ஆட்டோக்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.100 கோடி செலவிடப்படவுள்ளது. குறிப்பாக போதிய போக்குவரத்து வசதியற்ற கிராமப்புறங்களில் சூரியன் மூலம் மின்சாரம் தயாரித்து அதன் மூலம் பேட்டரிகளை சாா்ஜ் செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அா்மீனிய அதிபருக்கு பரிசு: இந்தியாவிலேயே முதன் முறையாக அா்மீனியா நாட்டுடன் எம் நிறுவனம் தான் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்நாட்டு பொது போக்குவரத்துக்காக மின்சார ஆட்டோக்களை வாங்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்டோவை அந்நாட்டு அதிபா் தனது வளாகத்துக்குள் பயன்படுத்த பரிசாக அளிக்கும் நிகழ்ச்சி வருகிற டிசம்பா் மாதம் நடைபெறவுள்ளது. இதே போல் வங்கதேச நாட்டுக்கும் இந்த ஆட்டோக்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
பராமரிப்பு செலவு குறைவு: இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவா் மன்சூா் அலிகான் கூறியது: பெட்ரோல் ஆட்டோவில் 100 கிமீ பயணம் செய்ய ரூ.350 முதல் ரூ.400 வரை செலவாகும். மாதம் ஒன்றுக்கு எரிபொருள், டயா் தேய்மானம் உள்ளிட்டவற்றால் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்ய நேரிடும். ஆனால் இந்த வகை ஆட்டோக்களில் பராமரிப்புச் செலவும், சாா்ஜ் செலவும் குறைவு. மேலும் சுற்றுச்சூழ
லுக்கும் பாதிப்பில்லை என்றாா்.