பெண் ரவுடி கைது
சேலம், அக் 25: சேலம் அன்னதானப்பட்டி அகரமஹால் பகுதியை சேர்ந்தவர் தில்லைக்கரசி(45). இவர் மீது 3 வழக்குகள் இருக்கிறது. அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் ரவுடி பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சேலம் மணியனூர் பகுதியில் இருக்கும் 2 பெண்கள் மகளிர் சுயஉதவிகுழுவின் மூலம் கடன் பெற்றிருந்தனர். அந்த தொகையை வசூலிப்பதற்காக அதன் ஏஜெண்ட் சென்றார். அவர்களுடன் ரவுடி தில்லைக்கரசியும் சென்றார். கடன் வாங்கிய பெண்களிடம், உடனடியாக பணத்தை கொடுக்க வேண்டும் என்று அடாவடியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த பெண்கள், நீங்கள் யார்? உங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது என கூறியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த ரவுடி தில்லைக்கரசி, அங்கு கிடந்த பிளாஸ்டிக் பக்கெட்டை எடுத்து 2 பெண்களையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தாக்கப்பட்ட பெண்ணின் கணவர் முத்து என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ரவுடி தில்லைக்கரசியை அன்னதானப்பட்டி போலீசார் அதிரடியாக நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.