நீர்வரத்து ஓடைக் கடைகளை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டியில்15இல் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டசெயலாளர் அழகுமுத்து பாண்டியன் பரபரப்பு பேட்டி? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
நீர்வரத்து ஓடைக் கைடகளை அகற்ற வலியுறுத்தி 15இல் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நீர்வரத்து ஓடைக் கடைகளை அகற்ற வலியுறுத்தி இம்மாதம் 15ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: மாவட்டத்தின் 2ஆவது பெரிய நகரமான கோவில்பட்டி. கோவில்பட்டி இலக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே நிலைய மேம்பாலம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது. இப்பணி 2018இல் தொடங்கியது.
இந்நிலையில், நீர்வரத்து ஓடைக்கடைகளை அகற்ற அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் போராடினர். இந்நிலையில், நீர்வரத்து ஓடைக் கடைதாரர்கள் நீதிமன்றத்தை நாடி தடை ஆணையும் பெற்று வந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 20ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ஆகஸ்ட் 24ஆம் தேதி நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கோவில்பட்டி பூவனநாத சுவாமி கோயில் தேவஸ்தானம் மற்றும் நீர்வரத்து ஓடை கடைதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், ஒலிபெருக்கி மூலமும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் தளர்வற்ற பொதுமுடக்க நாளான 23ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான தடை ஆணையும் பெறப்பட்டது.
இதையடுத்து, நீர்வரத்து ஓடை ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்படுவது நிறுத்தப்பட்டது. எனவே, மாவட்ட ஆட்சியரின் ஆணையை எதிர்த்து தடை ஆணை பெற்ற இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், அதற்கு உறுதுணையாக இருந்த இதர துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும், சட்ட மற்றும் நிர்வாக ரீதியாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள நீர்வரத்து ஓடைக் கடைகளை அகற்றி விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். ஓடைக்கடைதாரர்களுக்கு மாற்று இடத்தில் கடைகள் அமைக்க இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 15ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.
அப்போது, கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பரமராஜ், நகரச் செயலர் சரோஜா, தாலூகா செயலாளர் பாபு , நகர உதவிச் செயலர் அலாவுதீன் மற்றும் நகரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.