நடிகர் ரஜினிகாந்துக்கு என்ன பாதிப்பு? – வெளியான புதிய தகவல்
சென்னை
ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உறவினர் ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ரஜினியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒய்.ஜி மகேந்திரன், ரஜினியின் உடல்நலம் ஆரோக்கியமாக உள்ளது என்று கூறினார்.
ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறிய அவர், நிச்சயம் அண்ணாத்த திரைப்படம் வெளியாகும்போது வீட்டில் இருப்பார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து எனக்கு தெரியாது. தீபாவளிக்கு படம் வெளியாகும் போதும் ரஜினியும் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்து இருப்பார். உறவினர் என்ற முறையில் அவரை பார்த்து நலம் விசாரிக்க வந்ததாக கூறினார்.
ரஜினியின் உடல் நலம் பற்றி ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், ரஜினி நலமாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் வழக்கமான பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினிகாந்தை டாக்டர்கள் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப்பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரிசெய்யும் சிகிச்சையில் டாக்டர்கள் ஈடுபட்டு இருப்பதாகவும், நரம்பியல் மற்றும் இருதய துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து பின்னர் சென்னை திரும்பினார்.
சில நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு, மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். அதன் பிறகு அமெரிக்கா சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். அங்கு சில நாட்கள் அவர் தங்கி இருந்துவிட்டு சென்னை வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற ரஜினிகாந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக்கொண்டு சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தின் பிரத்யேக காட்சி ரஜினிகாந்துக்காக நேற்று சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டது. படத்தை குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் சென்று பார்த்தார்.
அவர் குடும்பத்தினருடன் சென்றிருந்த படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் ரஜினிகாந்த் திடீரென்று அனுமதிக்கப்பட்டார்.
ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் நேற்றிரவு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் உடல்நிலை குறித்து திரையுலகினரும், ரசிகர்களும் விசாரிக்க தொடங்கினர். இதுகுறித்து ரஜினிகாந்த் குடும்பத்தினர் கூறும்போது, ‘ரஜினிகாந்த் நலமுடன் இருக்கிறார். இது வழக்கமான சாதாரண மருத்துவ பரிசோதனை தான். விரைவில் வீடு திரும்புவார்’ என்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று பகல் 12.30 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு காரில் சென்றுள்ளார். காரில் இருந்து இறங்கி நடந்தே தான் ஆஸ்பத்திரிக்குள் சென்றிருக்கிறார். அவருடன் மகள் சவுந்தர்யாவும், அவருடைய கணவரும் சென்றுள்ளனர்.