ஊடகங்களுக்கு முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி வேண்டுகோள்
ஊடகங்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!
தமிழ் செய்தி ஊடகத்தில் முதன்மை தொலைக்காட்சியான நியூஸ் 7 தமிழ் நடத்திய தமிழ் ரத்னா நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விருதுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, நியூஸ் 7 தமிழின் நிர்வாக இயக்குனர் வி. சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், மேடையில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு, நியூஸ் 7 தமிழ் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊடகங்களின் தார்மீக கடமையை விளக்கும் வகையில் வேண்டுகோள் விடுத்தார் அதில்
➤ அரசு திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்த ஊடகங்கள் உந்து சக்தியாக விளங்குகிறது. அரசின் அறிவிப்புகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதோடு ஏழை எளியோரின் இன்னல்களை அரசுக்கு தெரியப்படுத்துகிறது. நாட்டில் மக்களாட்சி தழைத்தோங்க அரசாங்கமும், ஊடகமும் இரு கண்கள் போல செயல்பட வேண்டும்.
➤ ஊடகத்தின் மூலம் படிக்காத மக்களும் செய்திகளை கண்ணால் பார்த்தும், காதால் கேட்டும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. ஊடகங்கள் மக்களிடம் விழிப்புணர்வுடன், தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பாகும் செய்திகளுக்கு மக்களிடையே அதிக நம்பகத்தன்மை உள்ளதை கருத்தில் கொண்டும், தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மனதில் வைத்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும்.
➤ஊடகங்கள் ஒளிபரப்புவதை அசைக்கமுடியாத உண்மை என மக்கள் கருதுகிறார்கள். இதை மனதில் வைத்து நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்
➤அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது பட்டி தொட்டியில் வாழும் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவிகரமாக இருக்கும். இந்த செய்திகள் மூலம் ஏழை மக்கள் பயன்பெற்றால் அதுவே ஊடகங்களுக்கும் கிடைக்கும் உண்மையான வெற்றியாகும்.
➤ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தக்க ஆதாரங்களோடு முன்வைத்தால் பிரச்சனைகள் களைவதற்கு வாய்ப்பு ஏற்படும். சட்டமன்ற நிகழ்வுகள், நாடாளுமன்ற செய்திகள் பொருளாதாரம் குறித்த தகவல்கள், அறிவியல் தொழில்நுட்ப விளக்கங்கள் போன்ற செய்திகளை எளிமையாகவும் சுறுக்கமாகவும் அளிக்க வேண்டும்.
➤அதிக மக்கள் பார்க்க வேண்டும், பரபரப்பை ஏற்படுத்த வேண்டும், விளம்பரங்கள் வெகுவாக வர வேண்டும் என்ற குறுகிய பார்வையில் செய்திகள் சரிபார்க்காமல், அவசரகதியில் வெளியிடாமல், நன்றாக ஆராய்ந்து களத்தின் உண்மைத் தன்மை அறிந்து வெளியிட வேண்டும். அதுவே ஊடகங்களின் தார்மீக கடமை என முதலைச்சர் பேசினார்