கழுகுமலையில் தாரகாசூரன் வதம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கழுகுமலையில் தாரகாசூரன் வதம்! நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இங்கு பழைமை வாய்ந்த அருள்மிகு கழுகாசலமூர்த்தி திருக்கோயில் உள்ளது. குடவரைக்கோயிலான இக்கோயிலுக்கு விமானமோ கோபுரமோ கிடையாது. மலைதான் விமானமாகவும் கோபுரமாகவும் உள்ளது. இங்குள்ள கழுகாசல மூர்த்தி, ஒரு முகமும் ஆறு கரங்களும் கொண்டு அருள்பாலிக்கிறார்.இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டியும் ஒன்று. வழக்கமாகக் கந்தசஷ்டியின் 6-வது நாளில்தான் அனைத்து முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடக்கும். ஆனால், தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் 5-வது நாளான பஞ்சமி திதியில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த ஆண்டு, கந்த சஷ்டி விழா கடந்தமாதம் 28-ம் தேதி தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் கழுகாசலமூர்த்தி மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.மேலும் காலை, மாலை சுவாமி வள்ளி தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
கந்த சஷ்டி விழாவின் 5-ம் நாளான இன்று காலை சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி புராணங்களில் வரும் நிகழ்ச்சியை போன்று, சுவாமியின் தூதராக வீரபாகு சூரியனிடம் சென்று 3 முறை பேச்சுவார்த்தை நடத்தும் நிகழ்ச்சி கோயில் முன்பு நடந்தது. தொடர்ந்து சுவாமி தாரகாசூரனை சம்காரம் செய்தார்.வதம் செய்யும் விதமாக, அந்தப் பக்தர் பிடித்துள்ள யானை முகமுடி, வேலில் கட்டப்பட்டு தூக்கப்பட்டது.
பின்னர், அப்படியே சாய்ந்த அந்தப் பக்தர் தரையில் படுக்க வைக்கப்பட்டார். தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்ற பின் தெப்பக்குளத்தில் குளிப்பாட்ட தூக்கிச் செல்லப்பட்ட அந்தப் பக்தர், மீண்டும் முருகப் பெருமானை தரிசித்து விபூதி பெற்றார். இதனால், தாரகாசூரன் முருகப் பெருமானிடம் விமோசனம் பெற்றதாக ஐதிகம். இந்நிகழ்வில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கந்த சஷ்டியின் 6-வது நாளான நாளை மாலை, வழக்கமாக மற்ற முருகன் தலங்களில் நடைபெறுவதுபோல, சூரபதுமன், சிங்கமகாசூரன், தாரகாசூரன், வானுகோபன், தர்மகோபன் ஆகிய 5 அசுர சகோதர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
இரவு சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். சஷ்டியின் 6-ம் நாளான நாளை (2-ம் தேதி) காலை சுவாமி பல்லக்கிலும், வள்ளி தேவயானை பூஞ் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 12 மணிக்கு சண்முக அர்ச்சனை வழிபாடு நடைபெறுகிறது.
மாலை 3 மணிக்கு சிவ மேளங்கள் முழங்க சுவாமி வீர வேல் ஏந்தி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சீர்பாதம் தாங்கிகள் சார்பில் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மு. கார்த்தீஸ்வரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.