வேலூர்:????
ஏழாம் வகுப்பு மாணவிக்கு, கட்டாய திருமணம் செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் காட்பாடி, விருதம்பட்டை சேர்ந்த ஞானசேகரன், 55; கூலித்தொழிலாளி. இவர்களது இரு மகள்களில் ஒருவர், அரசு மகளிர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, மற்றொரு மகள் ஏழாம் வகுப்பு படிக்கின்றனர். இவரது உறவினர் ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், கடப்பகுண்டாவை சேர்ந்தவர் கோபிநாத், 30. இவருக்கு திருமணத்துக்கு பெண் பார்த்து கொண்டிருந்தனர். ஞானசேகரனின், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை திருமணம் செய்து கொள்ள கோபிநாத் சம்மதித்தார். ஜாதக பொருத்தம் பார்த்ததில், சரியில்லை என தெரிந்தது. இதனால் இரண்டாவது மகள் ஜாதகம் பார்த்ததில், 10 பொருத்தமும் சரியாக இருந்தது. இந்த விபரத்தை கோபிநாத்திடம் கூறி, திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர். ஆனால் இரண்டாவது மகள், தான் படிக்க வேண்டும் என்பதால், திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பெற்றோர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால், வேறு வழியின்றி சம்மதித்தார். கடந்த, 6ல், ஆந்திரா மாநிலம், சித்தூர் அருகே குடிபாலாவில் உள்ள அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. கடந்த, 8 ல், மாப்பிள்ளை விருந்துக்காக காட்பாடிக்கு வந்தனர். அப்போது, கல்வி சான்றிதழ் வாங்குவதற்காக, தான் படித்த பள்ளிக்கு தாலியை கழற்றி வீட்டில் வைத்து விட்டு மாணவி சென்றுள்ளார். அப்போது, தோழிகளிடம் கட்டாய திருமணம் நடந்தது குறித்து கூறியுள்ளார். தகவலறிந்த ஆசிரியர்கள், போலீசாருக்கு தெரிவித்தனர். விருதம்பட்டு போலீசார் மாணவி வீட்டுக்கு சென்று விசாரித்தனர். கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவுபடி, மாணவி மீட்கப்பட்டு அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, சித்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை கட்டாய திருமணம் செய்து கொண்ட கோபிநாத், 30, உடந்தையாக இருந்த அவரது தந்தை முத்துசாமி, 65, தாய் வரலட்சுமி, 60, திருமண புரோக்கர் நடேசன், 65, மாணவி உறவினர் நரசிம்மன், 45, ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மாணவியின் தந்தை ஞானசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.