⭕WinmeenNews.com⭕ தமிழகத்தில் உளவுப்பிரிவு போலீசாரின் அறிக்கை மீது நோ ஆக் ஷன்! முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா? காலியிடங்களால் பணிப்பளு அதிகரித்துள்ளதாக புலம்பல்
உளவு பிரிவு போலீசார் கொடுக்கும் அறிக்கை மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதை குறைத்து கொண்டதாலும், அந்த பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காததாலும், பணிப்பளு அதிகரித்துள்ளதாக போலீசார், உயரதிகாரிகள் புலம்புகின்றனர்.
தமிழக போலீசில், 32 மாவட்டம், ஏழு மாநகருக்கு, தலா ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில், மண்டலத்துக்கு டி.எஸ்.பி., அதற்கு மேல் கூடுதல் எஸ்.பி.,- எஸ்.பி., -ஐ.ஜி., என அதிகாரிகள் தலைமையில் எஸ்.பி.சி.ஐ.டி., செயல்படுகிறது. இவர்களை தவிர, மதம் சார்ந்த குற்ற புலனாய்வு, ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு, சிறைத்துறை, நீதிமன்ற விஜிலென்ஸ் பிரிவு உட்பட, 14க்கும் மேற்பட்ட நுண்ணறிவு பிரிவுகள் செயல்படுகின்றன. இவற்றில், கடந்த, 2008 வரை, 11,130 பேர் பணியாற்றினர். எஸ்.பி.சி.ஐ.டி., என சொல்லப்படும், உளவுத்துறையில், மட்டும், 2,100 பேர் பணியாற்றினர். இவர்களுக்கு சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து துறை, சிறப்பு பிரிவு போலீசாரை விட, 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டதால், போலீசார் மத்தியில் நுண்ணறிவு பிரிவுகளில் பணியாற்ற ஆர்வம் இருந்தது. ஆனால், கடந்த, 2010ல் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, 10 சதவீதம் என்பது, 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. நுண்ணறிவு பிரிவை விரும்பி பெறும் போலீசாரின் எண்ணிக்கை சரிய துவங்கியது.
குறிப்பாக பிற உளவு அமைப்புக்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, 12 ஆயிரத்தில் இருந்து, 8,000 ஆயிரமாக குறைந்துள்ள நிலையில், உளவுத்துறையில், 2,100 பேர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த, ஜூன் மாதம், 1,700 ஆகவும், அதன் பின்னர் பதவி உயர்வு, ஓய்வு பெற்று, 200 பேர் வெளியேறி விட்ட நிலையில், தற்போது, 1,500 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஒரு உளவுப்பிரிவு போலீஸ்காரர் இருந்த நிலை மாறி, இரண்டு, மூன்று போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஒரு உளவு போலீஸ்காரர் என, பணி ஒதுக்கீடு செய்யப்படுவதால், பணிப்பழு அதிகரித்துள்ளதாக போலீசார் புலம்புகின்றனர். குற்றச்செயல்கள், ஜாதி ரீதியான மோதல்களை முன்கூட்டியே அறிய முடியாத நிலை ஏற்படுவதாக உளவுப்பிரிவு போலீசார் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு பிரிவு உயரதிகாரிகளும் புலம்புகின்றனர்.
இது குறித்து உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது: தமிழகத்தின் முதல்வர் பதவி வகித்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், தங்கள் கட்சியினர், அமைச்சர்களின் தகவல்களை விட, உளவுப்பிரிவின் அறிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுத்தனர். அவர்களுக்கு பின்னர், உளவுப்பிரிவின் அறிக்கையின் மீதான முக்கியத்துவம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. உளவுப்பிரிவு போலீசார் வழங்கும் அறிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதை குறைத்துக்கொண்டனர். மேலும் இந்த அறிக்கைகள் முதல்வர் பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால், நேர்மையை விரும்பும் போலீசார் கூட, உளவுப்பிரிவு பணிக்கு வர தயக்கம் காட்டுகின்றனர். ஓய்வு பெறுவோரின் இடங்களுக்கும், புதிதாக ஆட்கள் நியமிக்கப்படுவது இல்லை. காலிப்பணியிடங்களை நிரப்பவும், உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது போலீஸ் துறைக்கு மட்டுமின்றி, அரசுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, உளவுப்பிரிவின் அறிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, இந்த பிரிவை மேம்படுத்த புதிதாக ஆட்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
⭕winmeenNews.com⭕ஊடகதளம்