திருவள்ளுவர் மாவட்ட தாமரைபாக்கத்தில் டி.எஸ்.பி முன்பு காய்கறிகளை சாலையில் வீசிய விவசாயி ?
விளைவித்த காய்கறிகளை சாலையில் டி.எஸ்.பி முன்பு வீசிய விவசாயி..! 3 மணி நேரம் காக்க வைத்த அவலம்
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இருசக்கரவாகனத்தில் காய்கறி மூட்டைகளை ஏற்றிச் சென்ற விவசாயி ஒருவரின் வாகனத்தை பறித்து 3 மணி நேரம் வெயிலில் காத்திருக்கவைத்து தண்டனை வழங்கியதால் ஆத்திரம் அடைந்த விவசாயி காய்கறிகளை டி.எஸ்.பி வாகனத்தின் முன்பு சாலையில் வீசி எறிந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் லாரிகளையோ, விவசாயி மற்றும் வியாபாரிகளை தடுக்கவோ வாகனங்களை பறிமுதல் செய்யவோ கூடாது என்று மத்திய மாநில அரசுகளும், தமிழக டி.ஜி.பி திரிபாதியும் அறிவித்துள்ள நிலையில் சில காவல்துறையினரின் பொறுப்பற்ற அதிகார அத்துமீறல் தொடர்ந்து வருகின்றது.
அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் கூட்டுசாலையில் வாகன சோதனையில் இருந்த வெங்கல் காவல் ஆய்வாளர் ஜெயவேல் என்பவர் கோயம்பேட்டிற்கு காய்கறி ஏற்றிச்சென்ற துணியால் மாஸ்க் அணிந்த விவசாயி ஒருவரை சம்பவத்தன்று காலை 8: 30 மணி அளவில் சிறைபிடித்துள்ளார்.
தனி தனியாக விவசாயிகள் இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை ஏற்றி செல்வதற்கு பதில் மொத்தமாக சேர்ந்து, லோடு வாகனத்தை ஏற்பாடு செய்து காய்கறிகளை கொண்டு செல்லலாமே ? என்று கொரோனா குறித்த விழிப்புணர்வே இல்லாமல் அறிவுறுத்தியுள்ளார்.
தான் கோயம்பேட்டிற்கு இதனை கொண்டு செல்லவில்லை என்றால் காய்கறிகள் எல்லாம் வீணாகி விடும் என்று விவசாயி கெஞ்சி கேட்டுள்ளார்.ஆனால் அதிகார போதையில் விவசாயியின் வாகனத்தை பறிமுதல் செய்ததோடு காய்கறி மூட்டைகளை சாலையோரம் இறக்க சொல்லி உத்தரவிட்டதால் அந்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
9 மணி அளவில் அருகில் உள்ள வங்கியில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வர ஆய்வாளர் ஜெயவேல், உதவி ஆய்வாளர் சுரேஷ் என்பவரின் கண்காணிப்பில் விவசாயியை இருக்க வைத்து விட்டு சென்றுள்ளார். நேரம் நீண்டு கொண்டே செல்ல அவர் திரும்பிவரவில்லை. 11.30 மணி அளவில் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட டி.எஸ்.பி யின் வாகனம் வந்துள்ளது.
அப்போதும் விவசாயியை விடுவிக்கவோ, காய்கறிகளை கொண்டு செல்லவோ அனுமதிக்காததால் காய்கறிகள் , கீரை கட்டுக்களை எல்லாம் வெயிலில் வாடி வதங்கி வீணாய் போனதை கண்டு விரக்தி அடைந்தார். ஒவ்வொரு பை மற்றும் மூட்டைகளில் தான் கொண்டுவந்த கீரை மற்றும் வெண்டை, அவரை, கத்திரி உள்ளிட்ட காய்கறிகளை டி.எஸ்.பி. வாகனத்திற்கு முன்பாக சாலையில் கொட்டி தனது வாழ்க்கையும் இந்த காய்கறிகள் போல வீணாக போய் விட்டதாக ஆதங்கத்துடன் கண்ணீர் வடித்தார்.
அதன் பின்னரும் அடங்காத காவல்துறையினர் 144 தடை உத்தரவை மீறியதாக விவசாயி மீது வழக்கு பதிவு செய்ததோடு, அவரது வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் அதிர்ச்சி அடைந்த வெங்கல் போலீசார் அவசர அவசரமாக விவசாயி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றதோடு அவரது வாகனத்தையும் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
இவர்களை போல பொறுப்பற்ற அதிகார போதையில் வலம் வரும் ஒரு சில காவல்துறையினரால், இரவு பகலாக கண்ணியத்துடன் மக்கள் பணி செய்யும் பல ஆயிரம் காவல்துறையினருக்கும் களங்கம் ஏற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி என்ற குறளுக்கு இலக்காகி ஒழுக்கத்தில் இருந்து தவறி பழியோடு நிற்கும் காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.??????