அடுத்தடுத்து 2முறை மருத்துவ சாத ணங்களுக்காக இந்தியாவை ஏமாற்றிய டிரம்ப்? தவிக்கும் தமிழகம் ?முழு விபரம் – விண்மீன் நியூஸ்
நட்பிற்கு கொடுத்த பெரிய விலை.. அடுத்தடுத்து 2 முறை.. இந்தியாவை ஏமாற்றிய டிரம்ப்.. தவிக்கும் தமிழகம்!
டெல்லி: கொரோனாவிற்கு எதிரான போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து இரண்டு முறை இந்தியாவை மிக மோசமாக ஏமாற்றி இருக்கிறார். டிரம்பின் சமீபத்திய செயல் தமிழகத்தை நேரடியாக பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
அடித்து பிடுங்குதல்.. இது அமெரிக்காவிற்கு இருக்கும் மிக முக்கியமான குணம். மத்திய கிழக்கு நாடுகளிடம் எண்ணெய்க்காக சண்டை போட்டது தொடங்கி சீனாவிடம் கடந்த வருடம் பொருளாதார ஒப்பந்தம் செய்தது வரை அமெரிக்கா உலகம் முழுக்க அடித்து பிடுங்குவதை தனது கொள்கையாகவே வைத்து இருக்கிறது.
முக்கியமாக சீனாவிடம் இறக்குமதி ஒப்பந்தம் செய்ய கட்டாயப்படுத்தி கடந்த வருடம் அமெரிக்கா வாங்கிய கையெழுத்து உலகம் முழுக்க பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்கா உலகம் முழுக்க இப்படி பல நாடுகளிடம் மறைமுகமாகவும், நேரடியாகவும் அழுத்தம் கொடுப்பது வழக்கம்தான்.
கொஞ்சம் கூட மாறவில்லை
முக்கியமாக தற்போது கொரோனா காரணமாக அமெரிக்கா மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் கூட அமெரிக்கா தன்னுடைய குணத்தில் இருந்து மாறவிலை. தன்னுடைய அதிகார மனப்பான்மையை அமெரிக்கா மாற்றிக்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட, அமெரிக்கா உலக நாடுகளை கட்டுப்படுத்துவதை, அடித்து பிடுங்குவதை விடுவதாக தெரியவில்லை. மற்ற நாடுகளுக்கு செல்லும் மருந்து பொருட்களை தங்கள் நாட்டிற்கு திருப்பி விடுவதை அமெரிக்கா வழக்கமாக கொண்டு உள்ளது.
உலக நாடுகளிடம் என்ன செய்தது
அந்த வகையில் சீனாவில் இருந்து ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளுக்கு செல்ல வேண்டிய மாஸ்குகளை அமெரிக்கா அடித்து பிடுங்கியது. அதாவது இந்த மூன்று நாடுகளுக்கும் சீனாவில் இருந்து மாஸ்க் ஏற்றுமதி செய்யப்பட பின் பாதி வழியில் அதற்கு அதிக பணம் கொடுத்து தங்கள் நாட்டிற்கு திரும்பி உள்ளது அமெரிக்கா. கொரோனா பாதிப்பில் இருந்து எப்படியாவது மீள வேண்டும் என்பதற்காக அமெரிக்கா இந்த செயலை செய்து வருகிறது.
இந்தியா நட்பு
இந்த நிலையில்தான் இந்தியாவையும் அமெரிக்கா இதேபோல் ஏமாற்றியது. தமிழகத்திற்கு சீனாவில் இருந்து வர வேண்டிய ரேபிட் கொரோனா டெஸ்ட் கருவிகளை அமெரிக்கா அடித்து பிடுங்கியது. தமிழகம் சீனாவிடம் 4 லட்சம் சோதனை கருவிகளை ஆர்டர் செய்து இருந்தது. கடந்த 10ம் தேதி இந்த ஆர்டர் தமிழகம் வந்து இருக்க வேண்டும். ஆனால் அதற்குள் அமெரிக்கா உள்ளே புகுந்து இந்த ஆர்டர்களை தங்கள் நாட்டிற்கு திருப்பியது.
தமிழகம் வர வேண்டியது
அதாவது நாம் காசு கொடுத்து டெலிவரிக்காக காத்து இருந்த நிலையில், அமெரிக்கா அதை கூடுதல் பணம் கொடுத்து வாங்கியது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா சோதனை மிகவும் மெதுவாக செய்யப்படுகிறது. இதனால்தான் ரேபிட் சோதனை கருவிகள் தமிழகத்திற்கு அதிக தேவையாக மாறியுள்ளது.
ரேபிட் கிட் வந்தால்தான் பரிசோதனையை விரிவுபடுத்தி அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். ஆனால் அதற்குள் அமெரிக்கா உள்ளே புகுந்து தனது வேலையை காட்டியுள்ளது.
மிக மோசம்
இதனால் தற்போது தமிழகம் மோசமாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா சோதனையை தீவிரப்படுத்த முடியாமல் தவிக்கும் நிலைக்கு தமிழகம் சென்றுள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இந்தியாவில் இருக்கும் முன்னணி மாநிலம் ஒன்றுக்கு டிரம்ப் இந்த துரோகத்தை செய்து இருக்கிறார். அமெரிக்கா இந்தியாவிற்கு இப்படி செய்வது முதல்முறை கிடையாது. கடந்த வாரமே அமெரிக்கா இந்தியாவை இப்படித்தான் டீல் செய்தது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் பிரச்சனை
கடந்த வாரம் முழுக்க இந்தியா – அமெரிக்கா இடையே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து பிரச்சனை நிலவியது. இந்தியா முதலில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது. ஆனால் இந்தியா இந்த தடையை நீக்கவில்லை என்றால் பதிலடி கொடுப்போம் என்று டிரம்ப் மிரட்டி இருந்தார். இது மிரட்டலை தொடர்ந்து இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதியை நீக்கியது. அதோடு அமெரிக்காவிற்கு குஜராத்தில் இருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் அனுப்பப்பட்டது.
குஜராத் நிறுவனம்
மூன்று குஜராத் நிறுவனம் மூலம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் போதிய அளவிற்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் இல்லை என்று புகார்கள் எழ தொடங்கி உள்ளது. எந்த மருந்து நிலையத்திற்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகள் போதிய அளவில் அனுப்பப்படவில்லை. மக்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று புகார்கள் எழ தொடங்கி உள்ளது. டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் நெருங்கிய நண்பர்கள்.. ஆனால் இந்தியா இந்த நட்பிற்கு மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளது!