சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவா?
மகாராஷ்ட்ரா சட்டமன்றப் பேரவையின் பதவிக்காலம் வருகிற எட்டாம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அம்மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதற்கான இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.
மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. ஆனால் முதலமைச்சர் பதவி சிவசேனாவுக்குத்தான் என்று அக்கட்சி போர்க்கொடி உயர்த்தியதால் கடும் இழுபறி காணப்படுகிறது. இந்நிலையில் 54 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரசுடனும், காங்கிரசுடனும் சிவசேனா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக நாளை சோனியா காந்தியை டெல்லியில் நேரில் சந்தித்து ஆதரவு கோர சரத்பவார் திட்டமிட்டுள்ளார். சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைந்தால் காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், சிவசேனாவும் பாஜகவும் வெவ்வேறு கட்சிகள் என்றும், பிரதிபா பட்டேல், பிரணாப் முகர்ஜி போன்றோரை குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் நிறுத்தியபோது சிவசேனா ஆதரவளித்துள்ளதை சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றாமல் தடுப்பதற்காக சிவசேனாவை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்கள் கோரியுள்ளனர்.
ஆனால் கூட்டணி தர்மத்தை மீற மாட்டோம் என்று சிவசேனா திடீர் பல்டி அடித்துள்ளது. நவம்பர் 8ம் தேதியுடன் மகாராஷ்ட்ரா சட்டமன்றத்தின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது.
புதிய அரசு தேர்வு செய்யப்படாவிட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனாவை எச்சரித்துள்ள பாஜக , முதலமைச்சர் பதவி, அமைச்சர்கள் பதவி , அமைச்சர்கள் இலாகா போன்றவற்றை பாஜகதான் முடிவு செய்யும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால் சிவசேனா கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது. காங்கிரசின் ஆதரவு கிடைக்காவிட்டால் புதிய அரசு நிலைத்திருக்க முடியாது என்பதை அறிந்துள்ள சிவசேனா கடைசி நேரத்தில் எடுக்கும் முடிவைப் பொருத்தே மகாராஷ்ட்ராவில் புதிய அரசு அமையும் என்று கூறப்படுகிறது.