வாழ்வில் நம்பிக்கை எதில் வைக்க வேண்டும்?✍️?✍️விண்மீன்நியூஸின் கதைகளம்✍️?✍️
வாழ்வில் நம்பிக்கை எதில் வைக்க வேண்டும்..??
நேற்று ஜோசியம் பார்க்கப் போன போது ஜோசியக்காரர் உனக்கு நேரம் சரியில்லை.
புதுசா எந்த முதலீடும் செய்ய வேண்டாம் என சொன்னதை நினைத்துக் கொண்டே பாலா தனது சுட்டி நாய் சிம்பாவை அழைத்துக் கொண்டு வாக்கிங் சென்றான்.
எதிர்பாராதவிதமாக குறுக்கே ஒரு முயல்குட்டி ஓடியதும் அதை விரட்டிக் கொண்டு சிம்பா முழுவீச்சில் ஓடியது. பல மணி நேரம் தேடியும் சிம்பா கிடைக்காததால் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்து சிம்பா புகைப்படத்தை முகநூலிலும் வாட்சாப்பிலும் கண்டுபிடிப்பவர்கள் அழைக்குமாறு அவனது தொடர்பை சேர்த்துப் பதிவிட்டான்.
ஜோசியம் சொன்னது போல் நேரம் சரி இல்லை தான் என நினைத்து அவனிடம் வியாபாரம் குறித்துப் பேச வந்தவரை திருப்பி அனுப்பி விட்டான்.
ஒரு வாரம் கழித்து அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது. முத்துமணி என்ற பெண் சிம்பா தன்னிடம் இருப்பதாகக் கூறினாள். சிம்பாவை அழைக்கச் சென்ற பாலாவிற்கு முத்துமணியை மிகவும் பிடித்து விட்டது. சிம்பா காணாமல் போனது நல்லது தான். அதனால் தான் முத்துமணியை சந்திக்க முடிந்தது என நினைத்து மகிழ்ந்தான்.
இருவரின் நட்பு தொடர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். வீட்டில் இது குறித்து சொன்ன போது ஜாதகம் பொருந்தவில்லை திருமணம் வேண்டாம் எனத் தடுத்து விட்டார்கள். ஆனால், முத்துமணியை மறக்க முடியாததால் பதிவுத் திருமணம் செய்ய முடிவெடுத்தான். திருமண நாளன்று மாலை வாங்கக் கடைக்குச் சென்ற போது ஹெல்மெட் திருடு போயிருந்தது.
தேட நேரம் இல்லாததால் ஹெல்மெட் இல்லாமலே பைக்கை ஓட்டினான். பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போது பைக் குழியில் இறங்கி தடுமாறி விழுந்து தலையில் அடிபட்டது. கண்திறந்து பார்க்கும் போது மருத்துவமனையில் இருந்தான். ஜோசியர் சொன்னது போல் ஜாதகம் சேராததால் தான் இப்படி நடந்து விட்டது என நினைத்து திருமண முடிவு எடுத்திருக்கக் கூடாது என நினைத்தான்.
ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர் உன் தலையில் கட்டி இருக்கிறது. சாதாரணமாக இதுபோன்ற கட்டிகள் ஆரம்பக் கட்டத்தில் தெரியாது. அது வளர்ந்த பின் தான் தெரியும். முற்றிப் போய் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போவார்கள். நல்லவேளை இந்த விபத்து உனக்கு நன்மையே செய்து இருக்கிறது என்றார்.
தனது முட்டாள்தனத்தை நினைத்து வருந்தினான் பாலா. சிறிது நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டி நீக்கப்பட்டது. முத்துமணியை திருமணம் செய்து கொண்டான்.
தண்ணீரில்லாத, காற்றில்லாத, வாழத் தகுதியற்ற கிரகங்களையும் நட்சத்திரங்களையும், பல இலட்சம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் கிரகங்களை வைத்து கணக்கிடும் ஜோசியர்களையும் நம்பாமல் “அவன் மீது நம்பிக்கை வைத்து வாழக் கற்று கொண்டான்” பாலா. விண்மீன் நியூஸ்