சாலை விபத்தில் அடிபட்டு இறந்தநாயின் வயிற்றிலிருந்து5 குட்டிகள் உயிருடன் மீட்பு? வேலூரில் சாதனை?
வேலூரில் சாலை விபத்தில் அடிபட்டு இறந்த நாயின் வயிற்றில் இருந்து 5 குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன.
வேலூர் மக்கான் சிக்னல் அருகே இரு தினங்களுக்கு முன்பாக தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்றபோது, எதிரே வாகனம் நாயை அடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் பலத்த அடிபட்ட நாய், உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தது. இதனைக் கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் உடனடியாக நாயை மீட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவமனையில் பணியில் இருந்த கால்நடை மருத்துவர் ரவிசங்கர் உடனடியாக நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் நாய் உயிரிழந்தது.
இதன்பின்னர் நாயின் வயிற்றில் குட்டி இருந்ததை கண்டறிந்த மருத்துவர், துரிதமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு வயிற்றில் இருந்த 5 குட்டிகளையும் உயிருடன் மீட்டார். பின்னர் கடையில் பால்பாட்டில் வாங்கி வந்து நாய்க்கு உணவளித்தார். தற்போது 5 குட்டிகளும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.